கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதே அனைத்து எதிர்க்கட்சியினரின் கவனமாக இருக்கவேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அக்கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளிலோ விவாதங்களிலோ காணவில்லை என்று அவர் தெரிவித்தார். மக்கள் செயல் கட்சியைச் சோதிப்பது, எதிர்க்கட்சிகள் அழிக்கப்படுமா இல்லையா, தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம் உள்ளிட்டவை பற்றி கலந்துரையாடல் நடைபெறுவதாக அவர் கூறினார்.
இந்த நெருக்கடியைத் தாண்டுவது எப்படி என்பது குறித்து பேசுவதே இப்போது ஆக முக்கியமானது என்று திரு சான், இன்று காலை தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் 'ஏபிசி பிரிக்வர்க்' சந்தையில் மேற்கொண்ட தொகுதி உலாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் தங்களது குடும்பங்களையும் வாழ்வாதாரத்தையும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்போகின்றனர் என்பதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
"அரசாங்கம் சரிவர பணியாற்றியுள்ளதா? சரியாகப் பணியாற்றினால் அதற்கு நாம் ஆதரவு தரவேண்டுமா அல்லது அதற்கு குறைந்த நாடாளுமன்ற இடங்களை வழங்கி தண்டிக்கவேண்டுமா?" என்றும் அவர் வினவினார்.