ஆறுமுகம் சுப்ரமணியத்தின் தொலைபேசி மணி காலை எட்டு மணிக்கெல்லாம் ஒலித்தது.
‘வாட்ஸ்அப்’ காணொளியில் தங்கை அழைக்கிறாள். பதறிபோய் அழைப்பை எடுக்கிறார், 34 வயது ஆறுமுகம்.
“அம்மா உன்னிடம் பேசவேண்டுமாம். எழுந்ததிலிருந்து போன் போட்டு கொடுக்கசொல்றாங்க,” என்ற தங்கை கைபேசியைத் தாயாரிடம் கொடுத்தார்.
நலம் விசாரித்த தாயார், “ஆறுமுகத்தைக் காணொளியில் பார்த்து பார்த்து பாசக் கண்ணீர் வடித்தார். சென்ற வாரம் நடந்த இந்த தாய்- மகன் பாசப் பிணைப்பு முதன்முறை நடந்த ஒன்றல்ல.
ஆறுமுகம் தூங்கிக்கொண்டிருக்கும் போதேல்லாம் இப்படி கைபேசி அழைப்புகள் அடிக்கடி வருவதுண்டு. அம்மாவின் செல்லப் பிள்ளையான ஆறுமுகம், காணொளி மூலம் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதே இல்லை.
“காணொளியில் அவர்களை எல்லாம் பார்த்தால் எனக்கு உடனே அழுகை வந்துவிடும். அதனால் தொலைபேசியில் பேசிவிட்டு வைத்துவிடுவேன். அப்போதுகூட நானும் சரி, என் அம்மாவும் சரி அழுகை இல்லாமல் தொலைபேசியை வைத்ததே கிடையாது,” என்றார் பாசமிகு மகன்.
கடைசியாக தனது தம்பியின் திருமணத்தை முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரையும் பார்த்து, கலந்துறவாடிவிட்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தவர் தான் ஆறுமுகம். இன்று வரை வீட்டுக்குப் போகவில்லை.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் அம்மா தூக்கத்தில் தம்மை அடிக்கடி கனவு காண்பதாகவும் அதனால் எழுந்தவுடன் தம்மைக் காண மிகவும் ஆவலாக இருப்பார் என்றும் கூறினார் ஆறுமுகம். தாயார் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் ஆறுமுகம்.
சிறுவயது முதல் அம்மாவுடனே இருந்து தாயார் பட்ட பாடுகளை எல்லாம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவர் ஆறுமுகம்.
“காலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மா எழுந்துவிடுவார். பல கடின வேலைகளைச் செய்து குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார்,” என்றார் ஆறுமுகம். பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய, மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து தமது 18வது வயதில் சிங்கப்பூருக்குப் பிழைப்புக்காக வந்தவர் ஆறுமுகம்.
சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஆறுமுகம், ஐந்து மருத்துவமனைகளில் படுக்கைகளைச் சரிசெய்யும் பணிகளைச் செய்து வந்துள்ளார்.
சார்ஸ், ஹெச்1என்1, இபோலா, மெர்ஸ் ஆகிய கொள்ளை நோய் சம்பவங்களின்போது மருத்துவ மனையில் வேலை செய்துள்ளார்.
இப்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று காலத்திலும் அவரது பணி தொடர்கிறது. அலெக்சாண்டிரா மருத்துவமனையின் ‘ஹவுஸ்கீப்பிங்’ பிரிவின் உதவி மேலாளராக பணிபுரிகிறார் ஆறுமுகம்.
தன்னுடைய பாதுகாப்பு, உடல் நலம் பற்றி தமது குடும்பத்தினர் கவலையோடு இருந்தாலும் மனம் தளராமல் மருத்துவமனையில் பணிபுரிவது மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவ மையங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் தொண்டூழியம் புரிகிறார் ஆறுமுகம்.
மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பேசுவோரிடம் தகவல் பெற்று மருத்துவர்களிடம் அவற்றைத் தெரிவித்து உறுதுணையாக இருக்கிறார் அவர்.
ஆறுமுகம் சாதாரண நேரங்களில்கூட வாரம் ஒரு முறைதான் ஜோகூரில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வார்.
கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் ஆறுமுகத்தின் குடும்பத்தினர், அவரின் தாயாரின் 60வது பிறந்தநாளை ஏப்ரல் மாதம் விமரிசையாகக் கொண்டாட இருந்தனர். ஆனால், கொவிட்-19 காரணமாக அந்தக் கொண்டாட்டம் நடக்கவில்லை.
“சிறு வயது முதல் என் அம்மா எங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு வருபவர். அவரது பிறந்தநாள் சாதாரண நாளாகத்தான் இத்தனை காலம் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு நல்லதொரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாகக் கொண்டாடவேண்டும் என நினைத்தோம்,” என்றாரவர்.
“சொந்த ஊரான சிலாங்கூரில் அம்மாவின் நண்பர்கள் மத்தியில் பெரிய அளவில் ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்தோம். என் அம்மாவிற்குச் சகோதர, சகோதரிகள் இல்லை. அவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்,” என்றும் அவர் சொன்னார்.
ஆண்டுதோறும் அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மாவிற்குப் பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுப்பது ஆறுமுகத்தின் வழக்கம், ஆனால் இவ்வாண்டு அதை செய்யமுடியாத நிலையை நினைத்து கவலையுடன் ஏங்கி நிற்கிறார் ஆறுமுகம்.
திருமணமாகிய ஆறுமுகத்திற்குப் பிள்ளைகள் இல்லை. அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்திருந்த ஆறுமுகம், இப்போது அதையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறார்.
விரைவில் வீடு திரும்பி குடும்பத்தோடு இணையும் காலத்தை எதிர்பார்த்து வருவதாக ஆறுமுகம் ஏக்கத்துடன் கூறினார்.