தென்மேற்குப் பருவமழைக்காலம் காரணமாக கடல்மட்டம் உயர்ந்து அதிலிருந்த குப்பை சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளது.
உதாரணத்துக்கு, ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைகளில் பிளாஸ்டிக் குப்பிகள், ஸ்டைரஃபோமால் செய்யப்பட்ட தட்டுகள் போன்ற குப்பைகுவிந்து கிடக்கின்றன.
மற்ற நாட்களுடன் ஒப்பிடுகையில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கடற்கரையில் ஒதுங்கிஉள்ள குப்பையின் அளவு
கிட்டத்தட்ட 90 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தளர்வின்போது ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைக்குக் பலர் வந்ததாக வாரியம் கூறியது. அவர்களில் பலர் தொடர்ந்து நல்ல பழக்கவழக்கங்
களைக் கடைப்பிடித்ததாக அது கூறியது. குப்பையைக் குப்பைத் தொட்டிகளில் வீசுவது அதில் அடங்கும்.
“ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை தென்திசை அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும். அப்போது கடலில் மிதக்கும் குப்பை கரையோரம் ஒதுங்கும். இதனால் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை மட்டுமின்றி பக்கத்து நாடுகளின் கடற்கரைகளும் பாதிப்படைகின்றன,” என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்கரைகளில் துப்புரவுப் பணிகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தொண்டூழிய அமைப்புகளும் முடுக்கிவிட்டு உள்ளன. முன்பைவிட கூடுதல் துப்புரவுப் பணிகளை நடத்துவதாக வாரியம் கூறியது.
முன்பு வாரத்துக்கு நான்கு முறை கடற்கரைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது நாளுக்கு இருமுறை நடத்தப்படுவதாக வாரியம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் குவிந்துகிடந்த 1,000 டன் எடை கொண்ட குப்பையை அப்புறப்படுத்தியதாக வாரியம் தெரிவித்தது.