சிங்கப்பூர் போலிஸ் அடுத்த தலைமுறை அதிவேக காரை நேற்று அறிமுகப்படுத்தியது. ஏராளமான தொழில்நுட்பங்களுடன் கூடிய அந்த கார், தேடப்படும் வாகனத்தை மோப்பம் பிடித்து சில வினாடிகளிலேயே கண்டுபிடித்துவிடும் ஆற்றலுடன் திகழும்.
‘எஸ்யுவி ஹியூண்டாய் டுசான்’ வகையைச் சேர்ந்த புதிய அடுத்த தலைமுறை வாகனங்களில் அதிநவீன தானியக்க எண் தகடு மோப்ப முறை இடம்பெற்று இருக்கம். இத்தகைய சுமார் 300 கார்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். பல வாகனங்கள் ஏற்கெனவே சாலைகளில் சேவையாற்றத் தொடங்கிவிட்டன. இப்போதைய போலிஸ் வாகனங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு 2024ல் முற்றிலும் புதிய தலைமுறை கார்களை போலிஸ் பயன்படுத்தும்.
அவசர அழைப்புகளுக்கு அதிவேகமாக புதிய வாகனம் விரைந்து வரும். அடுத்த தலைமுறை கார்களில் அமைந்திருக்கும் காணொளிப் படப் பதிவு முறை மிகத் துல்லியமானதாக இருக்கும். அதை நேரடியாக போலிஸ் நடவடிக்கை கட்டுப்பாட்டு தளபத்திய மையத்தில் இருக்கும் அதிகாரிகள் தெளிவாகப் பார்த்து நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடியும்.
புதிய காரின் பின்புறத்தில் வானொலி அதிர்வலை அடையாள தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இருக்கும்.
வாகனத்தில் கலகத் தடுப்பு கேடயங்கள், குண்டு துளைக்காத உடை போன்றவை இருக்கின்றனவா என்பதை இத்தொழில்நுட்பம் கண்டறியும். இதனால் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டிய தேவை இருக்காது.
தொடுதிரை மூலம் இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம். வாகனத்தில் அதிகாரிகள் வசதியாக, வேகமாக, சரளமாக ஏறி இறங்குவதற்குத் தோதாக இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. நீண்டநேரம் வாகனத்தில் சென்றாலும் களைப்பு ஏற்படாத வகையில் வசதிகள் உள்ளன.
கைதிகளைக் கைவிலங்கிட்டு கொண்டு செல்வதற்கு வசதியாக பின்னிருக்கைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
வெளிச்சம் குறைவாக இருக்கக்கூடிய இடங்களில் பயன்படக்கூடிய பிரகாசமான விளக்குகள் அடுத்த தலைமுறை போலிஸ் கார்களில் வெளிப்புறத்தில் உள்ளன.
குறைந்த அதிர்வலைகளைக் கொண்ட ஒலி அலைகளை உருவாக்கும் எச்சரிக்கை சாதனமும் காரில் இருக்கின்றன.
தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அணிகளின் ஓர் அங்கமாக இந்த கார்களும் இடம்பெறும். இவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம்.