சிங்கப்பூரின் ஆகப் பழமையான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைமைக் குருக்கள், நம்பிக்கை மோசடி சம்பவம் தொடர்பில் போலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி என்ற இந்தக் கோயிலின் தலை மைக் குருக்களின் பொறுப்பில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதை அடுத்து போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக சனிக்கிழமை அறிக்கை ஒன்றில் மாரியம்மன் கோயில் தெரிவித்தது.
இதனிடையே, இது பற்றி தான் கேட்டபோது, புகார் செய்யப்பட்டு இருப்பதை போலிஸ் உறுதிப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டது.
போலிஸ் புலன்விசாரணை தொடர்கிறது. தலைமைக் குருக்கள் இப்போது பிணையில் இருக்கிறார்.
கோயிலில் வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் தங்க நகைகள் சன்னதி உள்ளே தலைமை அர்ச்சகர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.
அந்த நகைகள் எல்லாம் சரியாக இருக்கின்றன என்பதை நேரடியாக சரிபார்த்து உறுதிப்படுத்த காலக்கிரம முறைப்படி சோதனைகள் நடக்கும் என்று இந்தக் கோயில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கடைசியாக நகைகளைச் சரிபார்த்தபோது தங்க நகைகள் சிலவற்றைக் காணவில்லை. அது பற்றி தலைமைக் குருக்களிடம் விசாரிக்கப்பட்டது. காணாமல் போயிருந்த எல்லா நகைகளையும் பிறகு அவர் நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைத்துவிட்டார்.
இதன் தொடர்பில் கோயிலின் நிர்வாகக் குழு மேலும் சோதனைகளை நடத்தியது. தங்க நகைகள் அனைத்தும் முற்றிலும் பத்திரமாக இருப்பது அந்தச் சோதனைகள் மூலம் உறுதியானது என்று தெரிவித்த கோயில், வேறு யாரும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.
ஒரு குற்றச்செயல் இடம்பெற்று இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, கோயிலுக்கு இழப்பு எதுவும் இல்லை என்றாலும், இது பற்றி போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது என்றும் இந்தக் கோயிலின் அறிக்கை குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் கோயிலுடன் தொடர்பு கொண்டபோது, தலைமைக் குருக்களின் பெயரை கோயில் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இருந்தாலும் புலன்விசாரணை நடப்பதால் இந்த விவகாரம் தொடர்பில், சம்பவம் நிகழ்ந்த தேதி, போலிஸ் புகார் அறிக்கை, குற்றச்செயல் பற்றிய மேல் தகவல்கள் போன்ற மேல் விவரங்களைத் தன்னால் தெரிவிக்க இயலாது என்று அப்பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில், குற்றச்செயல் சம்பவம் ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இந்த விவகாரம் பற்றி இந்து அறக்கட்டளை வாரியத்திடம் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகக் குழு, இதை இத்துடன் முடித்துக் கொள்வதன் தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் 1827 வாக்கில் கட்டப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயில் மிக முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சைனாடவுனில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரபலமான சுற்றுலா இடமாகும். இங்குதான் ஆண்டுதோறும் பிரபலமான தீமிதித் திருவிழா நடக்கும்.
தன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டு இருக்கும் எந்த ஒரு பொருளையும் ஒருவர் நேர்மையற்ற முறையில் தவறாகக் கையாண்டால், எடுத்துக்கொண்டால், பயன்படுத்தினால் அல்லது விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர் நம்பிக்கை மோசடி குற்றம் புரிவதாகக் கருதப்படும்.