தேசிய தின அணிவகுப்பு 2020 மேம்பட்ட பாதுகாப்புடன்கூடிய சிறப்பு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித் துள்ளது. பொது உத்தரவு சட்டத்தின்கீழ் அந்தப் பிரகடனம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, பாடாங்கையும் தி ஸ்டார் விஸ்டாவையும் சுற்றிலும் உள்ள பகுதிகள், ஆகஸ்ட் 9ஆம்தேதி சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் வட்டாரங்கள் என்று வகைப்படுத்தப்படும். அந்தப் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி அணிவகுப்பு நாளன்று கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
அந்தப் பகுதிகளுக்குள் இருக்கும் சிறப்பு மண்டலங்களில் கடும் பாதுகாப்புச் சோதனைகளும் இடம்பெறும். பாடாங்கில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடப்பில் இருக்கும். தி ஸ்டார் விஸ்டா வட்டாரத்தில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11.59 வரை பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இடம்பெறும்.
கொவிட்-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டில் தேசிய தின அணிவகுப்பு சிறிய அளவில் இரண்டு பகுதிகளாக இரு இடங்களில் நடக்கிறது.
பாடாங்கில் காலையில் அணிவகுப்பும் சடங்குபூர்வ நிகழ்ச்சிகளும் மாலையில் தி ஸ்டார் விஸ்டாவில் இருக்கும் தி ஸ்டார் மேடைக்கலை மையத்தில் மாலை நேர நிகழ்ச்சியும் நடக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சிறப்பு நிகழ்ச்சிப் பகுதிக்குள் பல பொருட்களுக்கு அனுமதி இருக்காது. வெடி பொருட்கள், ஒலிப்பெருக்கிகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். அந்தப் பகுதிக்குள் போலிசார் பொதுமக்களைச் சோதிப்பார்கள்.
சிறப்பு நிகழ்ச்சிப் பகுதிக்குள் வானூர்தி போன்ற ஆளில்லா ஆகாய ஊர்திகளுக்கும் தடை விதிக்கப்படும். குற்றம் புரிவோருக்கு 12 மாதம் வரையிலான சிறை $20,000 வரையிலான அபராதம் விதிக்கப்படக்கூடும். சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு சிறப்பு நிகழ்ச்சிப் பகுதிகளுக்குள் உட்புற அல்லது வெளிப்புற கூட்டங்கள், ஊர்வலம் நடத்த பொதுவாக போலிஸ் அனுமதி வழங்காது.
சிறப்புப் பகுதிக்குள் வருகின்ற, அந்தப் பகுதிக்குள் இருக்கின்ற மக்களை, வாகனங்களை போலிஸ் சோதனையிடும் வாய்ப்பும் உள்ளது. தேவை எனில் யாரையும் போலிஸ் வெளியேற்ற முடியும்.