சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 2) உறுதி செய்யப்பட்ட 313 கொவிட்-19 சம்பவங்களில், உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவர் 33 வயது நிரந்தரவாசி என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, பின்னர் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 13 வயது சிறுவனுடன் தனிமைப்படுத்தல் வளாகத்தில் தங்கி இருந்தவர் இந்த நிரந்தரவாசி மாது.
தனிமைப்படுத்தல் வளாகத்தில் இருந்தபோது ஜூலை 28லேயே அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன; நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு பிரத்தியேக வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஐவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து ஜூலை 19, 21 தேதிகளில் சிங்கப்பூருக்கு வந்த வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள்.
சார்ந்திருப்போர் அட்டையில் இருக்கும் இருவர் கடந்த மாதம் 21ஆம் தேதி ஜப்பான், இந்தியாவிலிருந்து வந்தவர்கள். மற்ற ஒருவர் ஜூலை 19 அன்று இந்தோனீசியாவிலிருந்து இங்கு வந்த மாணவர்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.