‘முஸ்தஃபா ஏர் டிராவல்’ நிறுவனத்தில் துணை நிர்வாகியாகப் பணிபுரியும் 43 வயது திரு அப்துல் ரஹ்மானுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியது இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி உறுதியானது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னமும் புரியாத புதிராக உள்ளதெனக் கூறுகிறார் அவர்.
தாம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் பிறருக்கு அதைப் பரப்பியிருப்பாரா என்ற சந்தேகமும் அவருக்குள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வேலை செய்கிறார்.
மூன்று வேலை நண்பர்களை ஏப்ரல் 1ஆம் தேதியன்று சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அவர்கள் மூவரும் பின்னர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இவர்களைத் தவிர ஏப்ரல் 3ஆம் தேதி, தம் மாமாவைச் சந்தித்து மூன்று மணி நேரம் அவருடன் செலவழித்தார் திரு ரஹ்மான்.
அந்த மாமாவும் பிறகு கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி மிதமான காய்ச்சல், தொண்டை வலி, உடம்பு வலி போன்ற அறிகுறிகள் திரு ரஹ்மானிடம் காணப்பட்டன. மறுநாள் கொவிட்-19 பரிசோதனைகளைச் செய்துகொண்டதை அடுத்து அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. அவரிடம் நோய்க்கான அறிகுறிகள் ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து இல்லாது போனாலும், முகரும் திறனை இழந்தார் அவர்.
தமக்கு நேர்ந்த நிலையைப் பற்றி 35 வயது மனைவியிடம் தொடக்கத்தில் மறைத்தார் திரு ரஹ்மான்.
இந்தியாவில் வசிக்கும் மனைவியும் 2 மற்றும் 5 வயதுகளுடைய பிள்ளைகளும் தம்மை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று நினைத்ததால் அவ்வாறு செய்தார். இருப்பினும், சில வாரங்கள் கழித்து மனைவியிடம் உண்மையைச் சொன்னதாக அவர் தெரிவித்தார்.
பின்னர், மே 17ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்ற நற்செய்தி வந்தபோது மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியதாகக் குறிப்பிட்டார் திரு ரஹ்மான்.
மொத்தம் 41 நாட்களைத் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கழித்த திரு ரஹ்மான், யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவருடன் கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருமே குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கூட்டம் நிறைந்த ஒரு கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் இவரது வேலை, அபாயம் மிக்கது. அத்துடன் அவர் பணிபுரியும் கட்டடத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள முஸ்தஃபா செண்டர், ஏப்ரல் 2ஆம் தேதியன்று கிருமித்தொற்று குழுமம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டது.
கொவிட்-19 கிருமியுடன் தமது போராட்டம் முடிவடைந்தது மகிழ்ச்சி அளித்தாலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று திரு ரஹ்மான் வலியுறுத்தினார்.