மன அழுத்தத்தால் அவதியுறுவோர் அல்லது உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்போர் ஆகியோருக்கு உதவும் பொருட்டு குறுந்தகவல் சேவையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது ‘எஸ்ஓஎஸ்’ எனப்படும் அபய ஆலோசனை மன்றம்.
நடப்பில் உள்ள நேரடித் தொலைபேசி சேவையுடன் இந்தக் குறுந்தகவல் தெரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு அளிக்கும் ஒரு கூடுதல் வழி என்று அந்த அமைப்பு நேற்று கூறியது.
எஸ்ஓஎஸ் டெக்ஸ்ட் எனப்படும் இந்தச் சேவை, கொவிட்-19 தொடர் பிலான நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்தில் அதிகரித்துக்கொண்டு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் மின்னஞ்சல்களுக்கும் ஒரு கூடுதல் வழியாக இருக்கும் என்றும் எஸ்ஓஎஸ் அமைப்பு தெரிவித்தது.
கடந்த இரு ஆண்டுகளாக பத்து வயது முதல் 29 வயது வரையிலான 94 இளையர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் கடந்த வாரம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு 400 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். 2018ல் அந்த எண்ணிக்கை 397. 2017ல் அது 361. 2016ல் அந்த எண்ணிக்கை 429 என்றும் தெரிவிக்கப்பட்டது.
பத்து வயது முதல் 29 வயது வரையிலான இளையர்களிடையே நிகழும் மரணங்களில் உயிரை மாய்த்துக் கொள்வதுதான் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக 20 வயது முதல் 29 வயது வரையிலான இளையர்களிடையே உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கு மற்ற வயது பிரிவினருடன் ஒப்பிடுகையில் அதிகம்.
அந்த 20 வயது முதல் 29 வயது வரையிலான இளையர்களின் மரணங்களில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 71 இளையர்கள் கடந்த ஆண்டில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த வயதுப் பிரிவினரிடம் இருந்து 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை அபய ஆலோசனை மன்றத்துக்கு 4,124 அழைப்புகள் வந்தன. முன்னைய ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 3,396.
எஸ்ஓஎஸ் அமைப்புக்கு அைழக்கும் இளையர்கள் தங்கள் மன அழுத்தத்துக்கு காதல் சிக்கல்கள், மனநலத்தைக் கட்டிக்காக்க சிரமப்படுதல் போன்றவற்றை முக்கிய காரணங்களாகத் தெரிவிக்கின்றனர் என்று அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி காஸ்பர் டான் தெரிவித்தார்.
இளையர்கள் எம்மாதிரியான சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை குடும்பத்தினரும் சமூகத்தினரும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும் என்றும் திரு டான் யோசனை கூறினார்.
‘லிமிட்லெஸ்’ எனும் அமைப்பை நடத்தும் சமூக ஊழியர் அஷர் லோ, கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளையர்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது என்றும் உயிரை மாய்த்துக்கொள்வோரில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவு என்றும் கூறினார்.