வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு பிரத்தியேக வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு நேற்று (ஆகஸ்ட் 3) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இந்தியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
இந்தியாவிலிருந்து திரும்பிய ஒரு வயதுக் குழந்தையும் அவர்களில் ஒருவர். சார்ந்திருப்போர் அனுமதி அட்டையைக் கொண்டிருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு, ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த 40 வயது நிரந்தரவாசி ஆடவர், நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொருவர்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 3 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொவிட்-19 தொற்றிய, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உள்ளது.