இரண்டு பரங்கிக் காய்களுக்குள் $30,000 மதிப்பிலான போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்து கடத்த முற்பட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் நேற்று (ஆகஸ்ட் 3) கைது செய்யப்பட்டார்.
சுமார் 240 கிராம் ஹெராயின், 1.5 கிராம் மெத்தாம்ஃபீட்டமைன், 500 எக்ஸ்டசி மாத்திரைகள், $2,276 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று குறிப்பிட்டனர்.
கிளமென்டி அவென்யூ 5ல் 64 வயதான அந்த ஆடவர், ஒரு கூடையில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு ஒரு வீட்டுக்குச் செல்வதை அதிகாரிகள் பார்த்தனர்.
பின் அங்கிருந்து வெளியேறி அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்துக்கு வந்த அந்த ஆடவரை போலிஸ் கைது செய்தது. 0.4 கிராம் ஹெராயின், 1 கிராம் ஐஸ், $2,276 ரொக்கம் போன்றவை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
அதே கட்டடத்திலிருந்த அந்த ஆடவரின் வீட்டில் பரிசோதனை செய்த அதிகாரிகள் மற்ற போதைப்பொருள்களைக் கண்டுபிடித்தனர்.
அந்த ஆடவரின் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய விசாரணை தொடர்கிறது.