கொவிட்-19 நோய்த் தடுப்பு மருந்துக்கான ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை சிங்கப்பூரில் தொடங்கியது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்க முன்வந்துள்ள தொண்டூழியர்களிடம் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த முன்னோட்டச் சோதனையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள் அதற்குப் பொருத்தமானவர்களா என்பதைப் பரிசோதிக்கும் பணிகளில் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் ஈடுபட்டு உள்ளனர்.இந்த நோய்த் தடுப்பு மருந்து ஆரம்பக்கட்ட பரிசோதனை அக்டோபர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்ஹெல்த் மருத்துவ விசாரணைப் பிரிவு இந்த முன்னோட்டச் சோதனையை நடத்துகிறது.
Lunar-Cov19 என்று அழைக்கப்படும் இந்த நோய்த் தடுப்பு மருந்தை டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் அமெரிக்க மருந்து நிறுவனமான ஆர்க்டுரஸ் தெரபியூடிக்சும் இணைந்து உருவாக்கியுள்ளன.
சிங்ஹெல்த் மருத்துவ விசாரணைப் பிரிவின் துணை மருத்துவ, அறிவியல் இயக்குநரான இணைப் பேராசிரியர் ஜென்னி லோ, இந்த முன்னோட்டச் சோதனையில் பங்கேற்க 250க்கும் மேற்பட்டோர் முன்வந்திருப்பதாகக் கூறினார். அவர்களில் சுமார் 100 பேர் இந்தப் பரிசோதனையில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் 20க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
“இந்த முன்னோட்டச் சோதனை 21 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கானது என்பதால் கூடுதலானோர், குறிப்பாக மூத்த வயதினர் இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று பேராசிரியர் லோ கூறினார்.
கொவிட்-19 நோய்த் தடுப்பு மருந்தில் புதியவகை உயிரியல் தொழில்நுட்பம் இருப்பதாகக் கூறப்படுகிறது.