சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான எல்லை கடந்த பயணம் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. குறுகிய காலப் பயணங்களுக்கான தடையற்ற இருவழிப் பயணம், நீண்டகாலப் பயணங்களுக்கான அவ்வப்போதைய பயண ஏற்பாடு ஆகிய இரு திட்டங்களின்கீழ் இரு நாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த அத்தியாவசிய அல்லது அதிகாரபூர்வ நோக்கங்களுக்கான பயணங்களுக்கு தடையற்ற இருவழிப் பயண ஏற்பாடு வகைசெய்கிறது. இதன்மூலம் அதிகபட்சம் 14 நாட்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும். வர்த்தகம், வேலை காரணங்களுக்காக நீண்டகால குடிநுழைவு அனுமதி பெற்றுள்ள இரு நாட்டவர்களும் அடுத்த நாட்டிற்குள் நுழைய அவ்வப்போதைய பயண ஏற்பாடு அனுமதிக்கிறது.
முதலாளிகள் அத்தியாவசிய சந்திப்புகளில் பங்கேற்கவும் ஊழியர்கள் அடிக்கடி சென்று தங்கள் குடும்பத்தினரைக் கண்டு வரவும் இந்தப் பயண ஏற்பாடுகள் அனுமதிக்கின்றன.இவ்விரு திட்டங்களின்கீழும் நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கிவிட்டன என்று வர்த்தக, தொழில் அமைச்சின் பேச்சாளர் சொன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
எல்லைகள் கவனமாகவும் படிப்படியாகவும் திறக்கப்படுவதை அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து உறுதிசெய்யும் என்று அவர் கூறினார்.
நேற்றுக் காலை 10 மணி நிலவரப்படி, இரு திசைகளிலும் ஏறத்தாழ 300 பேர் மலேசியா-சிங்கப்பூர் எல்லையைக் கடந்ததாக ஜோகூர் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, போக்குவரத்துக் குழுவின் தலைவர் முகம்மது சோலிஹன் பத்ரி தெரிவித்தார்.
இதனிடையே, கடற்பாலத்தை நடந்தே கடந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளுக்குப் பேருந்துச் சேவைகளை வழங்கும்படி ஜோகூர் பொதுப் போக்குவரத்துக் கழகத்தை அம்மாநில அரசு விரைவில் கேட்டுக்கொள்ளும் எனத் தெரிகிறது.பொதுப் போக்குவரத்தோ இணைப்புப் பேருந்துகளோ இயக்கப்படாததால் சொந்த வாகனம் இல்லாத பயணிகள் ஒரு கிலோமீட்டர் நீள கடற்பாலத்தை நடந்தே கடக்க வேண்டியிருக்கிறது.