சாங்கி விமான நிலைய குழுமத் தலைவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணிப்பெண், திருட்டுக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேல்முறையீட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
விமான நிலைய குழுமத் தலைவர் லியூ மன் லியோங்குக்கு எதிராக மனிதவள அமைச்சில் பணிப்பெண் புகார் கொடுப்பதை தடுப்பதற்காகவே திரு லியூ பணிப்பெண்ணுக்கு எதிராக புகார் அளித்ததற்கான சாத்தியம் இருப்பதாக தமது தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி சான் செங் ஓன் கூறியிருந்தார்.
பார்டி லியானி என்ற பணிப்பெண்ணுக்கு எதிராக புகார் அளித்தால் அந்தப் பெண்ணால் சிங்கப்பூருக்கு திரும்பி வந்து தமக்கு எதிராக சட்டவிரோதமாக வேலை வாங்கினார் என்று புகார் அளிக்க முடியாது என அவர் திட்டமிட்டதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்அத்துடன், பணிப்பெண்ணுக்கு எதிராக திரு லியூ குடும்பத்தாரின் சாட்சியமும் நம்பும்படியாக இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் சொல்லியிருந்தார்.
இதன் தொடர்பில் நேற்று கருத்துக் கூறிய அரசு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் அந்தத் தீர்ப்பை சரியாக ஆராய்ந்து மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டியுள்ளதா என முடிவெடுக்கப் போவதாக கூறியுள்ளது.
“நீதிபதியின் தீர்ப்பு மேற்கொண்டு விசாரணை தேவைப்படும் சாத்தியத்தை கோடி காட்டியுள்ளது,” என்று அரசு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
திருவாட்டி பார்டி லியானி, வயது 46, $34,000 மதிப்புள்ள பொருட்களை திரு லியூவின் வீட்டிலிருந்து திருடிவிட்டதாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கீழ்நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றம் புரிந்தவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி சான் செங் ஓன் அவரை விடுவித்தார்.அவர் விடுதலையானதை அடுத்து திரு லியூ மீது இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கப் போவதாக அவரது வழக்கறிஞர் அனில் பால்சந்தானி கூறியுள்ளார்.
இதில் அவருக்கு இழப்பீடு கிடைத்தாலும் தாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் என்று அவர் கூறினார்.