கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் தற்போதைய சூழலின் அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்ளவும் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மெய்நிகர் கருத்தரங்கில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
பல நாடுகளைச் சேர்ந்த ஏழு அனைத்துலக பேச்சாளர்களும் மூன்று உள்ளூர் பேச்சாளர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் தன்முனைப்புப் பேச்சாளருமான சுகி சிவம், சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் டாக்டர் டி. கமால் ஷரீஃப் அனைத்துலகப் பேச்சாளர்களாகக் கலந்துக்கொள்கின்றனர்.
இந்தாலி தலைநகர் ரோம், சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் சிக்காகோ, தாய்லாந்து போன்ற நாடு களிலிருந்தும் நகர்களிலிருந்தும் பேச்சாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
சிங்கப்பூர் அனைத்துச் சமய மன்றத்தின் முன்னாள் தலைவர் தூதர் கே.கேசவபாணி, மன்றத்தின் கௌரவச் செயலாளர் தெரேசா சியாவ், சிங்கப்பூர் பௌத்த சம்மேளனத்தின் தலைவர் செக் குவான் ஃபிங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹுசேன் முத்தாலிப் ஆகியோர் சிங்கப்பூர் பேச்சாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் சமயத் தலைவர்களின் பங்கு என்ற கருப்பொருளைக் கொண்ட கருத்தரங்கில் பல சமயத் தலைவர்கள், வழிபாட்டாளர்கள், நல்லிணக்க ஆர்வலர்கள், அரசாங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள், முனைவர்கள், மாணவர்கள், இளையர்கள், குடும்பங்கள் என பல தரப்பினரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.
அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு jamiyahsg எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் Jamiyah Singapore யூடியூப் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கடந்த 1932ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனம் சமயங்களுக்கிடையே புரிந்துணர்வை வலுப்படுத்தவும் முக்கிய அம்சங்கள் குறித்து பிணைப்பை ஏற்படுத்தவும் தொடர்ந்து ஆற்றி வரும் சேவையின் ஓர் அங்கமாக இந்த அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
“மக்கள் வாழ்வின் எல்லாத் துறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட அரசாங்கங்கள் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் ஆவன செய்து வருகின்றன. இந்தச் சவால் நிறைந்த சூழலில் சமயத் தலைவர்களின் பங்கு என்ன என்பதை சிந்திக்கவும், செயலாற்றவும் இந்த உலகளாவிய மெய்நிகர் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,” என்றார் இந்த அனைத்துலக கருத்தரங்கை வழிநடத்த விருக்கும் ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் எச்.எம். சலீம்.