உயர்கல்வி மாணவர்களின் கல்விச் செலவுகளைக் குறைக்க உதவுகிறது நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் கல்வி உதவி நிதி.
இவ்வாண்டின் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய சவால்களுக்கு மத்தியில் தெலுக் ஆயர் வட்டாரத்தில் அமைந்துள்ள நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் இம்மாதம் 12ஆம் தேதி கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தேறியது.
உயர்கல்வியில் பயிலும் மாணவர்கள், குறிப்பாக குறைந்த வருமான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கும் நோக்கத்தில் பல இனத்தையும் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான முகம்மது மாலிக்கி ஒஸ்மான் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
‘வக்காஃப் ஜாமிஆ’ (Wakaf Jamae) என்ற அறக்கட்டளை நிதியின் ஆதரவில் இவ்வாண்டு 25 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு $1,000,
பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு $800, தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு $600 என்று கிட்டத்தட்ட $21,000 மதிப்புள்ள கல்வி நிதி நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
கொவிட்-19 காரணத்தினால் பாதுகாப்பு தூர இடைவெளியோடு நிகழ்ச்சி நடந்தாலும் மாணவர்கள், பெற்றோர்களின் உற்சாகம் குறையவில்லை என்றார் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் செயலாளர் திரு நசீர் கனி.
“விருது பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில், வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையும்போது, அவர்களுக்கு உதவிய சமுதாயத்தை திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்,” என்றார் திரு நசீர்.
ஏறத்தாழ 40 விண்ணப்பங்களில் 25 மாணவர்களுக்கு மட்டுமே நிதி வழங்க முடிந்தது என்றும் விருது பெறாத மாணவர்கள் மற்ற உதவி அமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார் திரு நசீர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொழில் பரிவர்த்தனை, நிதித் துறையில் பயிலும் 24 வயது முஹம்மது இர்ஃபானுல்லாஹ் விருது பெற்றவர்களில் ஒருவர். தனிப்பட்ட செலவுகள் உட்பட பள்ளிக்கான கட்டணங்களையும் சுயமாகச் சமாளித்து வருகிறார் அவர்.
“சேமிப்பு, வேலைப்பயிற்சித் திட்டங்களில் சம்பாதிப்பது ஆகிய வழிகளில் தனியாகவே என் கல்விக்குக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறேன். என் தந்தைக்கு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. தாயார் முன்பு பணியாற்றினார், தற்போது இல்லத்தரசியாக இருக்கிறார். அதுபோக, எனக்கு மூன்று சகோதரர்களும் உள்ளனர். இந்தக் கல்வி உதவி நிதி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெருமளவில் உதவும்,” என்று குறிப்பிட்டார் திரு இர்ஃபானுல்லாஹ்.
அதே பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் துறையில் பயிலும் திரு யூசோஃப் ஃபரித், தமது சொந்தச் செலவுகளுக்கு பகுதி நேரமாக ‘ஃபுட்பாண்டா’ உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அவரும் இந்நிகழ்ச்சியில் விருது பெற்றார்.
“சொந்தச் செலவுகளை நானே வேலை செய்து கவனித்துகொள்கிறேன். கல்விக்கான போக்குவரத்து, உணவு என்ற அன்றாட செலவுகளுக்கு இந்த உதவித் தொகையைப் பயன்படுத்துவேன். என் பெற்றோர் மீதுள்ள நிதி பாரத்தைக் குறைக்க இந்த நிதி உதவும்,” என்றார் 23 வயது யூசோஃப் ஃபரித்.
விருது பெற்ற தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவரான 19 வயது குமாரி பிரபா வேலாயுதனும் அவருக்கு கிடைத்த $800 கல்வி உதவி நிதி தமது பள்ளிக் கட்டணங்களுக்கு உதவும் என்றுகுறிப்பிட்டார்.
நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் வருடாந்திர கல்வி உதவி நிதி விருது வழங்கும் நிகழ்ச்சி 2014ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.