‘எஸ்ஜி யுனைடெட்’ வேலை, திறன் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு ஏப்ரல் முதல் உணவு சேவை, உணவு உற்பத்தித் துறைகளில் சுமார் 5,400 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்தில் இரண்டு வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கானவை (பிஎம்இடி).
உணவுத் தொழில்நுட்பர்கள், சமையல் வல்லுநர்கள், உணவு, பான சேவை மேலாளர்கள், வர்த்தக மேம்பாட்டு மேலாளர்கள் போன்ற வேலைகளில் சுமார் 2,070 வேலைகள் பிஎம்இடி பிரிவினருக்கானவை.
எஞ்சிய 3,350 வேலைகள் மற்றவர்களுக்கானவை. வேலையைப் பொறுத்து அதற்கான சம்பளம் வேறுபடும்.
எடுத்துக்காட்டாக, பிஎம்இடி பிரிவினர், உற்பத்தி மேலாளர்கள் போன்றோருக்கு இடைநிலை மாதச் சம்பளமாக $2,850 வழங்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு இடைநிலை மாதச் சம்பளமாக $2,150 வழங்கப்படுகிறது.
வேலைகள் ஒருபுறமிருக்க, சுமார் 540 வேலைப் பயிற்சிகளை நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் 440 வேலைப் பயிற்சிகள் பிஎம்இடி பிரிவினருக்கானவை.
அதுபோக, சுமார் 740 பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் 420 பயிற்சி வாய்ப்புகள் பிஎம்இடி பிரிவினருக்கானவை.
சிங்கப்பூரில் வேலை நிலவரம் குறித்து மனிதவள அமைச்சு வாரந்தோறும் வெளியிடும் அறிக்கையில் இந்த விவரங்கள் நேற்று தெரிவிக்கப்பட்டன. இவ்வாண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களுக்கு இடையே ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பின் திட்டங்கள் மூலம் உணவுத் துறையில் 1,800க்கும் மேற்பட்டோர் வேலையில் அல்லது வேலைப் பயிற்சியில் சேர்ந்ததாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
அவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் பணியிடைக்கால ஊழியர்கள். வாழ்க்கைத்தொழில் உருமாற்றத் திட்டங்களில் பங்கேற்று அவர்கள் உணவுத் துறைக்கு மாறினர்.
உணவு உற்பத்தித் துறையில் சேர்ந்த பலரும் இதற்கு முன்னதாக நிதித் துறை, காப்புறுதித் துறை போன்றவற்றில் பணியாற்றியவர்கள். உணவு சேவைத் துறையில் சேர்ந்த பலரும் முன்னர் ஹோட்டல் துறை, போக்குவரத்து மற்றும் பொருள் சேமிப்புத் துறை, நிர்வாக மற்றும் ஆதரவுச் சேவைத் துறை போன்றவற்றில் பணிபுரிந்தனர்.
புத்தாக்க நிர்வாகம், செயல்பாட்டு நிர்வாகம், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் திறன் உடையோருக்கு உணவு உற்பத்தித் துறையிலும் பல்வேறு வாய்ப்புகளைப் பெற முடியும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
உணவு சேவைத் துறையைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் சேவை, உணவுப் பொருளை சந்தைப்படுத்துதல், மின்னிலக்கத் திறன் போன்றவற்றில் ஒருவர் ஏற்கெனவே பெற்ற திறன்களைப் பயன்படுத்தலாம்.
உணவுத் துறையில் வேலை அனுபவம் இல்லாதவர்கள், ‘எஸ்ஜி யுனைடெட் ஸ்கில்ஸ்’ திட்டத்தின்கீழ் வேலைப் பயிற்சியில் ஈடுபடலாம். இவ்வாண்டு எப்ரல் முதல் நிறுவனங்கள் வழங்கும் இத்தகைய வேலைப் பயிற்சியில் கிட்டத்தட்ட 80 பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.