சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொரிய நாட்டவரான கிம் தோயுங், 22, என்ற மாணவர், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தங்கும் அறை ஒன்றில் சென்ற ஆண்டு மார்ச் 21ஆம் தேதி ஒரு மாணவியைத் தாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவர் மீது கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அவரின் வழக்கு அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்பில் விவரம் கேட்டபோது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேல் விவரங்களை இப்போதைக்குத் தெரிவிக்க இயலாது என்று இப்பல்கலைக்கழகம் கூறிவிட்டது.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் உள்ளூர் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் அண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். அவர்களில் கிம் ஒருவர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக மாணவரான லீ யான் ரு என்பவர், சென்ற ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியை மானபங்கம் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. லீ, 24, விசாரணை கோரி இருக்கிறார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஹான் ஷியு, 18, என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் இரண்டு வார தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து குளித்துக்கொண்டு இருந்த ஒரு மாணவியை அந்த மாணவர் படம் எடுத்ததாகக் கூறப்பட்டது.
இந்தக் காரியத்தை அவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்தார். அதனையடுத்து பல்கலைக்கழகம் அவரை நீக்கிவிட்டது.
இத்தகைய குறுகிய கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் கொஞ்ச நாட்களுக்குச் சிறையில் இருப்பார்கள். இருந்தாலும் விடுதலையான பிறகு இவர்களின் பெயர் குற்றவாளிகளின் பதிவேட்டில் இடம்பெற்று இருக்காது.