ஆடவர் ஒருவர், 2012ல் ஒரு மாதை திருமணம் செய்துகொண்டார். அந்த மாதுக்கு ஏற்கெனவே 7 வயதில் ஒரு பெண் உண்டு.
அந்தச் சிறுமிக்குக் கொஞ்சம் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட சில குறைபாடுகள் உண்டு.
அந்த 41 வயது ஆடவரும் அவர் மணம் புரிந்துகொண்ட மாதும் சிறுமியும் வசித்து வந்த வீட்டில், அவர்களுடன் அந்தச் சிறுமியின் பாட்டி, தங்கை, பணிப்பெண் ஆகியோருடன் வாடகைக்கு வேறு ஒரு பெண்ணும் குடி இருந்தார்கள்.
இப்படி இருக்கையில், 2017ல் சிறுமிக்கு 12 வயதான போது முதன் முதலாக அவரிடம் அந்த ஆடவர் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டார். பிறகு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பல தடவை சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்.
வீட்டில் தனியாக இருந்தபோது அல்லது மற்றவர்கள் தூங்கியபோது அவர் இந்தக் காரியத்தைச் செய்து வந்தார். நடந்ததைச் சொன்னால் பாட்டியும் தாயாரும் என்ன சொல்வார்களோ, நம்புவார்களோ நம்பமாட்டார்களோ என்று பயந்துகொண்டு அந்தச் சிறுமி அதை யாரிடத்திலும் சொல்லவில்லை. உடல் நிலை சரியில்லாத தாயாரிடம் சொன்னால் அவருக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்று சிறுமி கருதியதும் காரணம்.
கடைசியாக 2018 நவம்பர் 2ஆம் தேதி தனது பள்ளிக்கூட ஆலோசகரிடம் அந்தச் சிறுமி நடந்ததை எல்லாம் சொன்னார். உடனே போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே நாளன்று ஆடவர் கைதானார்.
பாலியல் கொடுமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதர ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 24 பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற கட்டளைக்கேற்ப இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் விவரங்களை வெளியிட முடியாது.