வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில், கொவிட்-19 பாதிப்பின் தொடர்பில் கூடியவரை குறைந்த அளவிலானவர்களைத் தனிமைப்பத்தும் விதத்தில் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வேலைக்கான இடையூறு குறைக்கப்படுவதுடன் ஊழியர்களின் நலவாழ்வும் மேம்படும்.
யாருக்காவது கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் வசிக்கும் புளோக் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் அணுகுமுறை நடப்பில் இருந்தது; அண்மையில் கொவிட்-19லிருந்து தேறியவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது, விடுதியில் யாருக்காவது கொவிட்-19 தொற்று ஏற்பட்டால், அவர் வசிக்கும் தளம் அல்லது பிரிவு என சிறு குழுவினர் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என மனிதவள அமைச்சு இன்று (செப்டம்பர் 25) தெரிவித்தது.
மற்ற கொவிட்-19 கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதுடன், விடுதிகளைப் பகுதிகளாகப் பிரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள விடுதிகளுக்கு இது பொருந்தும் என்றது அமைச்சு.
மேலும், கடந்த 150 நாட்களுக்குள்ளாக கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்ற அம்சமும் பின்பற்றப்படும். இதற்கு முன்பு, தொற்றிலிருந்து விடுபடடு 120 நாட்கள் முடிந்திருந்தால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மீண்டும் கிருமி தொற்றுவதற்கு எதிரான ஆண்டிபாடிகள் கூடுதல் நாட்களுக்கு உடலில் இருக்கும் என மருத்துவ ஆதாரங்கள் தெரிவிப்பதையடுத்து, இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாக மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.