தேசிய இளையர் மன்றம் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் இளையரும் மாணவர்களுமாக 120 பேர் கலந்துகொண்டனர். மூன்று வெவ்வேறு தலைப்புகளில் அவர்கள் விவாதம் செய்தனர். வேலைகள், அவற்றின் எதிர்காலம், எளிதில் பாதிக்கப்படுவோருக்கான ஆதரவு, சுற்றுச்சூழல் மற்றும் நீடிக்கும் நிலைத்தன்மை ஆகியன பற்றி அவர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் விவாதித்தனர்.
கொரோனா கொள்ளைநோயால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புநிலையில் வேலை தேடுவதைப் பற்றிய கவலையே அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது. கொள்ளைநோயின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு சிங்கப்பூரின் எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக ஜூன் மாதம் முதல் அரசாங்கம் கலந்துரையாடல் தொகுப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
‘ஒன்றிணைந்து வலிமையுடன் மீண்டெழுவதற்கான சிங்கப்பூர் கலந்துரையாடல்’ என்னும் அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தேசிய இளையர் மன்றத்தின் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்டத் துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.
மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங், உள்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், கலாசார, சமூக, இளையர் துறை நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டோரில் அக்கிலா தியானா பர்வின் ஆ, 20, என்னும் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவரும் ஒருவர். ஒவ்வொரு நிறுவனமும் அனுபவசாலிகளை வேலைக்கு எடுப்பது போலத் தோன்றுவதாகவும் படித்து பட்டயம், பட்டம் போன்றவற்றுடன் வேலைதேடத் தொடங்கும் தலைமுறையினருக்கு அது கவலை அளிக்கும் போக்கு என்றும் அவர் கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளரிடம் கூறினார். இருப்பினும் நிறுவனங்களின் தேவைக்கேற்ற அனுபவசாலிகளைத் தேடுவது கடினமானது என்றும் அக்கிலா தெரிவித்தார்.
அதேநேரம் முகம்மது ருடி அப்துல் ஹமித், 31, என்னும் மூத்த சமூக சேவை நிர்வாகி வேறுவிதமாகக் கருத்து தெரிவித்தார். வேலைத்திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளகப் பயிற்சிகளையும் முன்கூட்டியே, உயர்நிலைப் பள்ளி மட்டத்திலேயே அளிக்கலாம் என்னும் யோசனை தமது விவாதக் குழுவில் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலை முடித்து வைத்துப் பேசிய அமைச்சர் டோங், இது இத்துடன் நின்றுவிடாமல் ஒருவருக்கொருவர் கலந்துறவாடி புதிய யோசனைகளை உருவாக்கு மாறும் அந்த யோசனைகளுக்குச் செயல்வடிவம் தருவது குறித்து சிந்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.