“55 வயதான பிறகு தமது மத்திய சேம நிதி (மசேநி) கணக்கிலிருந்து சேமிப்புகளை எடுக்க முடியாது, 55 வயதை எட்டும்போது சேமிப்புகளை எடுக்காவிட்டால் பின்னர் பணத்தை எடுக்க முடியாது,” போன்ற பல தவறான கருத்துகள் மக்கள் இடையே இன்றளவும் நிலவுகின்றன.
அவை உண்மை என்று நம்பி அச்செய்திகளை மற்றவர்களிடம் அவர்கள் பகிர்வதும் உண்டு.
இதை முறியடிக்கும் வண்ணம், மசேநி குறித்த விவரங்களை விளக்கி உண்மை என்னவென்பதை மக்களுக்குப் புரியவைக்கிறார் மசேநி பீஷான் சேவை நிலையத்தின் துணை வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக பணியாற்றும் திருமதி ஷீனா கஸ்தூரி, 35.
மசேநி குறித்த ஐயங்களைத் தெளிவுபடுத்த நிலையத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும் அவர்கள் சொல்வதைப் பொறுமையாக கேட்பது அவசியம் என்றும் மசேநி வாடிக்கையாளர் சேவைத் துறையில் ஏறக்குறைய 13 ஆண்டுகால அனுபவமுடைய திருமதி ஷீனா சொன்னார்.
“சில நேரங்களில் மக்கள் அதிகம் கோபப்படுவார்கள். பணம் எடுக்கலாம் என்று என் நண்பர் சொன்னார், நானும் எடுக்க போகிறேன் என்று வாதிடுவார்கள். உண்மைத் தகவலைப் பொறுமையுடன் அவர்களுக்கு விளக்குவோம்,” என்றார் திருமதி ஷீனா.
ஓய்வுக்காலத் தொகை, சொத்து உரிமை ஆகிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு, தகுதி பெறுபவர்கள் 55 வயதை எட்டியவுடன் மசேநிதி கணக்கிலிருந்து சேமிப்புகளை எடுக்க முடியும் என்றும் 55 வயதை எட்டியதுடன் எந்த நேரத்திலும் சேமிப்புகளை எடுக்க அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கினார் திருமதி ஷீனா.
“வங்கிகளைவிட மசேநி கணக்கில் இருக்கும் தொகை கூடுதல் வட்டியைப் பெறுகிறது. மசேநி உறுப்பினர்களிடம் இதை எடுத்துரைக்கும்போது சில வேளைகளில் அவர்கள் சேமிப்பை எடுக்க விரும்பமாட்டார்கள். அவர்களிடம் இதுகுறித்து விளக்கும்போது அவர்களுக்கு தெளிவும் மனவுறுதியும் கிடைக்கிறது,” என்றார் திருமதி ஷீனா.
மசேநி உறுப்பினர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் $20, $50 போன்ற சிறிய தொகையை மசேநி கணக்கில் சேமித்து வந்ததை திருமதி ஷீனா நினைவுகூர்ந்தார்.
“அவர் தற்போது ஒவ்வொரு மாதமும் $400 முதல் $500 வரை மாதாந்திர வழங்குதொகையைப் பெற்று வருகிறார். அவர் சேமித்து வந்த சிறு தொகை கூட்டு வட்டியாக (compund interest) ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது,” என்று திருமதி ஷீனா கூறினார்.
ஓய்வுக்கால செலவுகளைச் சமாளிப்பதற்கு கையில் போதிய அளவு பணம் இருப்பதை உறுதிப்படுத்த ஒருவர் பணக்காரராக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
சிறு தொகையாக இருந்தாலும் முன்கூட்டியே சேமித்து வந்தால், பணக்கவலையின்றி ஓய்வுக்காலத்தை கழிக்கலாம் என்பதை இச்சம்பவம் எடுத்து காட்டுகிறது.
மசேநி குறித்த மேல் விவரங்களுக்கு cpf.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.
'முரசிடம் கேளுங்கள்'
மசேநி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா? 'முரசிடம் கேளுங்கள்' என்ற புதிய கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைந்திருங்கள். உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் வகையில் மத்திய சேம நிதிக் கழகம் கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளிக்கும்.
கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இம்மாதம் 14ஆம் தேதி வெளிவரும் தமிழ் முரசில் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறும்.