குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாக இருந்தாலும் நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கறிஞர் வாதாடும் அளவுக்கு வசதி இல்லாமல் இருக்கலாம். ‘புரோ போனோ’ என அழைக்கப்படும் இலவச சேவையை வசதி குறைந்தோருக்காக வழக்கறிஞர் சமூகம் காலங்காலமாக வழங்கி வருகிறது. ஆனால், இது குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை என்று இரு இளம் வழக்கறிஞர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
சட்டத்தின்முன் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நம்பும் சிராஜ்குற்றவியல் அல்லது சிவில் வழக்கை எதிர்நோக்கும் பலர், என்ன செய்வதென்று தெரியாமல் கடைசிவரை திணறுகின்றனர், அல்லது வெகுதாமதமாகவே உதவி நாடுகின்றனர். குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு இலவசச் சேவை சென்றடையும்போது, அது சட்டத்தின் சமத்துவத்தை நிலைநாட்ட, வழக்கறிஞர் ஆற்றும் கடமையாகக் கருதப்படுகிறது என்று 100க்கும் அதிகமான வழக்குகளை இலவசமாகக் கையாண்ட சிராஜ் தெரிவித்தார்.
இலவசச் சேவைகளில் பெரும்பகுதி குற்றவியல் வழக்குகளாக இருக்கும். ஏனெனில், அத்தகைய வழக்கின் முடிவு, குற்றம் சாட்டப்பட்டவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை பெற்றிருக்கும். மரண தண்டனை தொடர்பிலான விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் தொடர்ந்து இருப்பாரா என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு இத்தகைய வழக்குகள் இருப்பதால் இலவச சட்ட சேவை அமைப்புகள் இவற்றுக்கே முன்னுரிமை தந்து வருகின்றன.
‘சில்வெஸ்டர் லீகல்’ சட்ட நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் 32 வயது சிராஜ் ஷேக் அஸிஸ், முன்னதாக ‘கிளாஸ்’ வழக்கறிஞராக ஈராண்டுகளுக்கு, அரசு மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பலருக்காக இலவச சேவை ஆற்றி வந்தார். வேலைக்கான சம்பளம் குறைவு என்றாலும் நீதிமன்ற விசாரணையைத் தனியே எதிர்நோக்குபவரது வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தம் ஆசை என்று சிராஜ் தெரிவித்தார்.
“இந்த உதவியால் குற்றம் சாட்டப்பட்டவரின் பதற்றம் குறைகிறது. சட்டம் பற்றிய சரியான புரிதலின்றி அவர் நீதிமன்ற விசாரணையின்போது தடுமாற வேண்டியதில்லை,” என்று சிராஜ் தெரிவித்தார்.
இலவச சேவையால் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம்
சரியான நேரத்தில் செய்யப்படும் தமது சேவையால் சிலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதையும் அவர் மகிழ்ச்சியுடன் சுட்டினார்.
“கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது ஆடவர் ஒருவருக்காக நான் வாதாடினேன். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நான் அந்த ஆடவரின் வழக்கை ஏற்றுக்கொண்டேன். அவருக்குச் சட்டரீதியாகத் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கியதால் இறுதியில் அந்த ஆடவருக்கு கண்காணிப்பு ஆணை விதிக்கப்பட்டது. எந்தக் குற்றவியல் பதிவும் அவரது பெயரில் இல்லாததை அடுத்து கடந்த மாதம் ஒரு நிறுவனத்தில் ஆடவருக்கு வேலை கிடைத்தது. இதுபோன்ற நிகழ்வு எனக்கு மனநிறைவை அளிக்கிறது,” என்று சிராஜ் தெரிவித்தார்.
‘விழிப்புணர்வு தேவை’
குற்றவியல் வழக்குகள் மட்டுமின்றி மணமுறிவு, உயில், விபத்து மற்றும் காயம் தொடர்பிலான முறையீடு, மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு போன்ற விவகாரங்களுக்குச் சட்ட அமைச்சின்கீழ் இயங்கும் சட்ட உதவிப் பிரிவு, சேவை வழங்குகிறது.
மரண தண்டனையுடன் தொடர்பில்லாத குற்றவியல் வழக்குகளுக்கு ‘கிளாஸ்’ திட்டம் பயனளிக்கும். மரண தண்டனை வழக்குகளுக்கு ‘லாஸ்கோ’ திட்டம் உள்ளது. திட்டங்களுக்குத் தகுதிபெறாவிட்டாலும் ‘தேவை அடிப்படையில் இலவச சட்ட உதவிக்கான பரிந்துரை திட்டம்’ (Adhoc Pro Bono Referral Scheme) உள்ளது.
இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி பெறும் சாத்தியம் உள்ளபோதும் இவை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான தேவை இருப்பதாக சிராஜ் கருதுகிறார். இளம் வழக்கறிஞர்கள் இத்தகைய பணிகளை மேற்கொள்ள அவர்களது முதலாளிகளும் மேல் அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்.
“சட்டத் துறையில் பணிபுரியாதவர்களும் இத்தகைய உதவித் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொண்டு உதவி தேவைப்படுவோருக்கு வழிகாட்டலாம். இது வழக்கறிஞர்களான எங்களுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேருதவியாக இருக்கும்,” என அவர் கூறினார்.
‘மேலும் சிறந்த வழக்கறிஞராகலாம்’ என்று கூறும் அஷ்வின்
வசதி குறைந்த கட்சிக்காரர்களுக்காக இலவசமாக வாதாடும்போது வழக்கறிஞர்களுக்குத் தேவையான பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடிவதாக வழக்கறிஞர் அஷ்வின் ஹரிஹரன், 28, கூறுகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 25க்கும் அதிகமான வழக்குகளில் இலவசமாக வாதிட்டுள்ள அஷ்வின், தற்போது இலவசமாக 10 வழக்குகளைக் கையாள்கிறார்.
“குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தபோது இலவச சட்ட சேவை வழங்கினேன். சட்ட ஆலோசனை நிலையங்களிலும் நான் தொண்டூழியம் ஆற்றினேன்,” என்று அவர் தெரிவித்தார். நம்பிக்கை மோசடி, ஊழல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளில் அஷ்வின், கட்சிக்காரர்களைப் பிரதிநிதித்திருக்கிறார். குற்றவியல் வழக்குகளில் ஒருவரது சுதந்திரம், வாழ்வாதாரம், ஏன் உயிரும்கூட பணயமாக வைக்கப்படுவதால் அவர் களுக்காக இலவசமாக வாதிடுவது முக்கியம் என்கிறார் காளிதாஸ் சட்ட நிறுவனத்தில் பணியாற்றும் அஷ்வின்.
குற்றவியல் சட்ட உதவித்திட்டத்தின் முக்கியத்துவம்
குற்றவாளியை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதிக்காத சூழலில் வழக்கின் சில உண்மைகள் வெளிவராமல் போகலாம். தண்டனையின் கடுமையைக் குறைக்க அல்லது மாற்றுவதற்கான வாய்ப்பை நீதிமன்றம் இழக்கலாம் என்று அவர் தெரிவித்தார். அப்போது குற்றவியல் சட்ட உதவித் திட்டம் பேருதவியாக உள்ளது. வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவருக்காக தொடக்கத்திலேயே குற்றத்தைப் பற்றி தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்திடம் விளக்கம் தரலாம்.
“இதனால் குற்றச்சாட்டு மீட்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சிறைத்தண்ட னையைத் தவிர்க்கும்படியும் வழக்கறிஞர் கேட்டுக்கொள்ளலாம்,” என்று அஷ்வின் கூறினார். முதல்முறை குற்றம் சாட்டப்படும் ஒருவருக்குச் சட்ட ரீதியான நடைமுறைகளை அவர் சார்பில் இலவசமாக வாதாடும் வழக்கறிஞர்கள் எடுத்துரைக்கலாம் என்றும் கூறினார்.
‘கிளாஸ்’ திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் ஒருவரது வருமானம், அவர் பக்கம் உள்ள நியாயம் ஆகிய இரண்டு கூறுகளின் அடிப்படையில் அந்த விண்ணப்பம் மதிப்பிடப்படும்.
“இவ்வாறு தகுதிபெறாத சிலருக்காகவும் நான் உதவியிருக்கிறேன். அப்படிச் செய்ததால் அவ்வழக்குகளின் முடிவும் மாற்றி அமைக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜாலான் புசாரில் தீ மூட்டி நாச வேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓர் ஆடவர், ஆயுள் தண்டனையை எதிர்நோக்கினார். ‘கிளாஸ்’ திட்டத்தின் வழியாக தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகத்திடம் முறையிட்டு குற்றச்சாட்டின் கடுமையைத் தாம் குறைத்ததாக அஷ்வின் கூறினார்.
“தண்டனையை அதிகரிக்க அரசு தரப்பு முயன்றபோதும் இறுதியில் என் கட்சிக்காரருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது,” என்றார். இன்னொரு வழக்கில் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்திற்காகச் சிறைத் தண்டனையை எதிர்நோக்கிய ஆடவரின் வழக்கை, இத்திட்டத்தின் வாயிலாக கையாண்டார் அஷ்வின். தன் கட்சிக்காரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்க மனநலக் கழக அறிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அந்த ஆடவர் சிறைத் தண்டனைக்குப் பதிலாக கட்டாய சிகிச்சை ஆணையை நிறைவேற்றினார்.
“சிலர் பசி தாளாமல் உணவு திருடி பிடிபடுவர். உணவு வாங்கக் காசு இல்லாதோருக்கு ஒரு வழக்கறிஞரைப் பணியில் அமர்த்துவதற்கான சிந்தனை ஏது? இதுபோன்ற சூழலில் உள்ள சிலருக்கு நான் உதவியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
இலவச சட்ட உதவிக்கு ஒருவர் எவ்வாறு தகுதிபெறலாம்?
குற்றம் சாட்டப்பட்டவருக்காக இலவசமாக வாதாடும் வழக்கறிஞர்கள், ‘கிளாஸ்’ (CLAS) எனப்படும் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின் மூலம் இச்சேவையை வழங்குகின்றனர். இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்புவோர் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.
ஒன்று, ‘மீன்ஸ் டெஸ்ட்’ அதாவது விண்ணப்பதாரரின் வருமானம், வாழ்க்கைத் துணையின் வருமானம், சேமிப்பு, சொத்து ஆகியவை 12 மாதக் காலத்தில் 10,000 வெள்ளிக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்.
மற்றொன்று, ‘மெரிட்ஸ் டெஸ்ட்’. இதில் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கில் நியாயம் உள்ளதா என்பது ஆராயப்படும்.
படங்கள்: திமத்தி டேவிட்