திருடப்பட்ட கடன் அட்டையைக் கொண்டு $15,000 மதிப்பிலான பரிவர்த்தனைகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 47 வயது மாது ஒருவரும் பதின்ம வயதினர் மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அவர்கள் ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், மின்-ஸ்கூட்டர், பணப்பை, கடிகாரம் போன்ற பொருட்களை வாங்கக் கடன் அட்டையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டதன் சந்தேகத்தில் மேலும் நான்கு பதின்ம வயதினர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 13 முதல் 17 வயதுக்குட்பட்ட அவர்களில் இருவர் ஆண்கள்.
சென்ற மாதம் 21ஆம் தேதியன்று கடன் அட்டையின் உரிமையாளரிடமிருந்து புகார் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.அதையடுத்து உரிமையாளரிடமிருந்து கடன் அட்டையைப் பறித்தது, 14 வயது சிறுவன் என்று விசாரணையில் தெரிய வந்தது. கூட்டுச் சதியில் மோசடிக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததன் தொடர்பில் இன்று மாது மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.