உயர்நிலைப் பள்ளி நாட்களிலிருந்தே வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் துறை ஒன்றில் இருக்க வேண்டும் என்பது 22 வயது ரா.ஷிவானியின் ஆசை. குறிப்பாக, அழகான தோற்றத்துடன் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கும் விமானப் பணிப்பெண்ணாக எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் அவர் சுற்றுப்பயணத் துறை சார்ந்த நைடெக்’ சான்றிதழ் பெற்று ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வாடிக்கையாளர் அனுபவ நிர்வாகத் துறையில் பட்டயக்கல்வியைப் பயின்று முடித்தார். இவ்வாண்டு மே மாதம் பட்டயக்கல்வி முடிந்தவுடன் கனவு மெய்ப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்த ஷிவானிக்கு கொவிட்-19 கொள்ளை நோய் சூழல் சவால் விடுத்தது. ஒட்டுமொத்த விமானத் துறையே நிலைகுத்திப் போகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஏமாற்றம் இருந்தது. இது பல ஆண்டு கனவு மட்டுமல்ல. அதற்கான உழைப்பையும் நான் முதலீடு செய்திருந்தேன். இருப்பினும், தற்போதைய கிருமித்தொற்று நிலவரம் விமானப் பணிப்பெண் ஆவதைப் பற்றி சிந்திக்க வைத்தது,” என்று ஷிவானி பகிர்ந்துகொண்டார்.
தமக்கு வேறு எதில் ஈடுபாடு உள்ளது என்ற சிந்தனையோட்டத்தில் சமூக சேவைத் துறை ஏற்றதாக தோன்றியது. குறிப்பாக சிறப்புத் தேவைகளுடைய பிள்ளைகளுடன் செயல்பட வேண்டும் என்று தன் பெற்றோருடன் கலந்து ஆலோசித்ததில் முடிவெடுத்தார்.
ஆனால் அதற்கான துறை சார்ந்த வேலை அனுபவமும் அதன் தொடர்பான படிப்பும் இல்லாதது, வேலை தேடுதலின்போது ஷிவானிக்குத் தடையாக இருந்தது. சுமார் 30 சமூக சேவைத் துறை வேலைகளுக்கு விண்ணப்பித்ததில் எந்த பதிலும் வரவில்லை. ஷிவானி முயற்சியைக் கைவிடவில்லை. செயிண்ட் ஆண்ட்ரூஸ் சிறப்புத் தேவைப் பள்ளியில் உதவி ஆசிரியருக்கான 12 மாதகால ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டத்திற்கு’ அவர் விண்ணப்பித்தபோது அவரின் முயற்சி கைகூடி வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், அப்பள்ளியில் இணைந்த ஷிவானி, உதவி ஆசிரியராகப் பயிற்சி பெற்று வருகிறார்.
ஆசிரியர்களுடன் இணைந்து பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது இவரது பொறுப்பு. சிறப்புத் தேவை மாணவர்களைத் திறம்பட சமாளிப்பதற்குத் துறைமீது உள்ள இவரது பேரார்வம் கைகொடுக்கிறது.
“சில சமயங்களில் பிள்ளைகள் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிக்காட்டுவர். அப்போது என்ன செய்வது என்று தெரியாவிட்டால் சக ஆசிரியர்கள் தாங்கள் கையாளும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வர். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கல்விப் பாடத்திட்டம் உள்ளது. பள்ளி
இதுவரை மாணவர்களைப் பற்றி சேகரித்துள்ள குணாதிசய பின்னணியை உள்ளடக்கும் அறிக்கைகளையும் நான் விவரமாக படித்து வருகிறேன்,” என்று சொன்னார் ஷிவானி.
பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் நடப்பது, உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அவர்களை நடவடிக்கைகளின் வழி மகிழ்விப்பது, சக ஆசிரியர்களுக்கு உதவுவது என செய்யும் பணியில் இன்பம் காண்கிறார் இளையர் ஷிவானி. பிள்ளைகளின் தொடர்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இவரது புதிய பாதை உருவாகி வருகிறது.
உள்ளூர் பல்கலைக்கழகத்தில் சமூக சேவை சார்ந்த பட்டப்படிப்பைப் பகுதிநேரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இவரது அடுத்த இலக்காகும்.
“நமது கட்டுப்பாட்டில் இல்லாத வற்றைப் பற்றி எண்ணி துவண்டு போகக்கூடாது. அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் புதிய பாதை மகிழ்ச்சி தந்தால், தாராளமாக அந்தப் பாதையிலேயே செல்லுங்கள்,” என்று உற்சாகமூட்டுகிறார் ஷிவானி.