வெளிநாட்டு ஊழியருக்கு உதவி வரும் ‘அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்ர்ஸ் அவுட் ரீச்’ அமைப்பின் ‘பிஃப்ரண்டர்ஸ்’ திட்டத்தில் மனநலம் குறித்து பேசுவதற்குப் பயிற்சி பெற்ற கிட்டத்தட்ட 700 தொண்டூழியர்கள் உள்ளனர்.
“ஒவ்வொருவரிடமும் அன்றாடம் குறைந்தது 40 நிமிடங்களாவது தொலைபேசியில் பேசுவோம். அவர்களின் தேவைகளை அறிந்து தகுந்த உதவிகளை வழங்குவோம்,” என்றார் திட்டத்தை வழிநடத்தும் திரு சேமுவெல்.
மனிதவள அமைச்சுடன் இணைந்து கடந்த மாதம் தொடங்கிய ‘புரோஜெக்ட் சன்ஷைன்’ திட்டம் வழி, ஊழியர்களை வாரத்திற்கு மூன்று முறை பூங்காக்கள், வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கும் இடங்களில் தேவைப்படும் உதவிகளை நல்குகிறது இந்த அமைப்பின் மற்றொரு பிரிவான ‘டோர்ம் மாம்ஸ்’. 52 வயது தொண்டூழியர் திருமதி பிரியா மதன் மோகன் வழிநடத்தும் இத்திட்டத்தில் ஏறக்குறைய 40 பெண் தொண்டூழியர்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு குறைந்தது நான்கு விடுதிகளில் வண்ண அலங்காரம் செய்து, வீட்டில் சமைத்த உணவையும் அன்றாடத் தேவைக்குப் பயன்படும் தீபாவளிப் பரிசுகளையும் வழங்கி ஊழியர்களை உற்சாகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பிரியா கூறினார்.