கடந்த எட்டு ஆண்டுகளாக ஐந்து வளர்ப்புப் பிள்ளைகளை வளர்த்த வளர்ப்புத் தாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
வளர்ப்புப் பிள்ளைகளை வளர்த்த அதே சமயத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கும் எளிதில் பாதிப்படையக்கூடிய முதியோருக்கும் உதவ சமூக நலத் திட்டம் ஒன்றையும் 53 திருவாட்டி சரிமா அமாட் தொடங்கி வைத்தார்.
இல்லத்தரசியான திருவாட்டி சரிமா அமாட் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் பிள்ளைகளுக்கும் வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கும் பள்ளிக்குத் தேவையான புத்தகங்கள்,
பேனாக்கள், பென்சில்கள் போன்ற பொருட்களை வழங்கும் திட்டத்தை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாது தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டினார். மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்டபோது அதன் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிவாரணப் பணிகளுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.
திருவாட்டி சரிமா அமாட்டின் இந்த அரும்பெரும் பணிகளை அடையாளம் கண்டு அவருக்கு இவ்வாண்டின் மிகச் சிறந்த ஈசூன் குடியிருப்பாளர் விருது வழங்கப்பட்டது. திருவாட்டி சரிமா அமாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள விருதை நீ சூன் நகர மன்றம் முதல்முறையாக வழங்குகிறது.
சமூகத்துக்குப் பங்களித்துள்ள, சேவை செய்யும் உணர்வுள்ள குடியிருப்பாளரை அடையாளம் கண்டு அவருக்குப் பெருமை சேர்ப்பதே இந்த விருதின் இலக்கு.
விருது பெறுவதற்காக ஐந்து பேர் முன்மொழியப்பட்டனர். ஃபேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட வாக்களிப்பில் பெரும்பாலானோர் திருமதி சரிமா அமாட்டைத் தேர்ந்தெடுத்தனர்.
2010ஆம் ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக திருவாட்டி சரிமா அமாட்டுக்குக் குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர், சீலாட் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் ஆகிய பணிகளிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்தபோது, பிள்ளைகளை வளர்க்கும் திட்டம் குறித்து தெரியவந்ததாக அவர் கூறினார்.
2012ஆம் ஆண்டில் நான்கு வயது சிறுமியை அவர் பராமரிக்கத் தொடங்கினார். இந்தச் சிறுமி இன்றும் அவரது பராமரிப்பின்கீழ் உள்ளார். 2013ஆம் ஆண்டில் மூன்று வயது சிறுவனை அவர் வளர்க்கத் தொடங்கினார்.
ஆனால் ஏழு மாதங்களிலேயே வலிப்பு நோய் காரணமாக அச்சிறுவன் உயிரிழந்தான்.
அதனைத் தொடர்ந்து, இன்னொரு மூன்று வயது சிறுவனைத் திருவாட்டி சரிமா அமாட் ஆறு மாதங்களுக்கு வளர்த்தார். 2015ஆம் ஆண்டில் இரண்டரை வயது சிறுவனை ஐந்து மாதங்களுக்கு அவர் வளர்த்தார்.
2016ஆம் ஆண்டில் இரண்டு மாதப் பெண் குழந்தையை அவர் வளர்க்கத் தொடங்கினார். அக்குழந்தை இன்றும் அவருடன் வசித்து வருகிறது.
திருவாட்டி சரிமா அமாட்டுக்கு சொந்த பிள்ளைகள் மூவர் உள்ளனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர்.