குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடும் தருணம் திரு தேவ் தயாளனுக்கு அரிதாகவே கிடைக்கும். ஏனெனில், அவரது வேலை அப்படிப்பட்டது.
கடந்த 27 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஏர்லைன்சில் பணியாற்றி வரும் தலைமை விமானச் சிப்பந்தியான திரு தேவ், கடந்தாண்டு தீபாவளியன்று இரவு 7 மணிக்குத் தான் வீட்டிற்கு வர முடிந்தது.
இந்நிலையில், இவ்வாண்டு நாள் முழுக்க மனைவி, மகள்கள் இருவருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடியதுடன் இவரால் கோவிலுக்கும் சகோதரர் வீட்டிற்கும் சென்று வர முடிந்தது. ஆனாலும், வழக்கமான கொண்டாட்ட உணர்வு இம்முறை இல்லை.
கொவிட்-19 நெருக்கடியால் விமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
இப்போதெல்லாம் இரு மாதங்களுக்கு ஒருமுறையே விமானத்தில் சேவை வழங்க இவர் அழைக்கப்படுகிறார். ஆதலால், பாதுகாவல் துறையில் அதிகாரியாகவும் பயிற்சியாளராகவும் இருந்து நெருக்கடியான சூழலை இவர் சமாளித்து வருகிறார்.
“என் மனைவிக்கும் மகள்களுக்கும் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என எப்போதும் கடப்பாடு கொண்டு இருக்கிறேன். அதுவே சவால்களை எதிர்கொள்ள எனக்கு உத்வேகம் அளித்து வருகிறது,” என்றார் திரு தேவ்.
நேரில் காண காத்திருக்கும் தம்பதி
சிங்கப்பூரரான மகேஸ்வரனும் மலேசியரான ஆனந்தியும் ஈராண்டுகளுக்குமுன் திருமண உறவில் இணைந்தனர். இங்கு வர்த்தக மேலாளராகப் பணிபுரிகிறார் 37 வயது மகேஸ்வரன். இவருடைய மனைவி ஆனந்தி, 33, ஜோகூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவராக இருக்கிறார்.
சில நாள்கள் சிங்கப்பூரிலும் சில நாள்கள் மலேசியாவிலுமாக குடும்ப வாழ்க்கையை ஓட்டி வந்த இத்தம்பதி, கொவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடுகளால் கடந்த எட்டு மாதங்களாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியவில்லை.
அதனால், தீபாவளியன்றும் திறன்பேசி மூலமாகவே ஒருவரை ஒருவர் பார்த்து, கொண்டாட வேண்டியதாயிற்று. ஆனாலும், இது தற்காலிகமே என மனத்தைத் தேற்றிக்கொண்டு, மனைவியை நேரில் காண ஆவலுடன் காத்து இருக்கிறார் திரு மகேஸ்வரன்.