சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ‘ஏ380’ ரக விமானங்களை உணவகங்களாக்கி மக்கள் உணவருந்தும் சேவையை அறிமுகப்படுத்தியது. அந்த அனுபவத்தை தங்களின் அமைப்பைச் சேர்ந்த மூத்தோருக்கு ஏற்படுத்தித் தந்தது சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்.
“சங்கம் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் உறுப்பினர்களுக்கு கலந்துறவாடும் வாய்ப்பை ஏற்படுத்தும். கொரோனா சூழலில் அது சாத்திய மாகவில்லை. எனவே, மன உளைச்சலுக்கு உள்ளான மூத்த உறுப்பினர் களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த விருந்தை வழங்கினோம்,” என்றார் ஏற்பாட்டை முன்னின்று செய்த அமைப்பின் துணைச் செயலாளர் திரு முஹையத்தீன் பிச்சை, 60.
“பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு அமைப்பு ஆதரவை அளிக்க முனைந்தது,” என்றார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான திரு நசீர் கனி.
“விருந்துக்கு வந்தவர்களில் சிலர் தங்கள் வாழ்நாளில் விமானத்தில் ஏறியதே கிடையாது. இந்த அனுபவம் அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது,” என்றார் திரு முஹையத்தீன்.
சக உறுப்பினர்களுடன் விருந்துண்டு விமானத்தைச் சுற்றிப்பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தார் ஓய்வுபெற்ற தமிழாசிரியை திருமதி மரியம் பீவி.
“வெளிநாட்டுக்குச் சென்று வந்ததைப் போலவே இருந்தது. விமானத்தில் இருந்தபோது மழை பெய்தது. விமானம் பறப்பது போன்றே உணர்வு இருந்தது,” என்ற அவர், இது தனித்துவமான அனுபவமாக இருந்ததென்றார்.