மரக்கல நிர்வாகம், பணமாற்று வணிகம், சரக்குப் படகுகளை இயக்குதல், கடை உரிமையாளர்கள், தொழிலாளிகள் என துறைமுக நகராக இருந்த சிங்கப்பூர் துரித வளர்ச்சி காண்பதற்கு பங்களித்தவர்களில் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரும் அடங்குவர்.
இச்சமூகத்தினரின் வரலாற்றையும் பங்களிப்பையும் ஆராயும் வகையில் இந்திய மரபுடைமை நிலையம் நாளை மறுதினம் ‘ஸூம்’ எனும் மெய்நிகர் சந்திப்பு தளம் வாயிலாக ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ - இணைய கருத்தரங்கு தொடரில் ‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் வரலாறு’ எனும் தலைப்பில் ஜெர்மானிய பேராசிரியர் டார்ஸ்டன் சாஹர் பேசவிருக்கிறார்.
சிங்கப்பூர், மலேசியா தமிழ் முஸ்லிம் சமுதாயங்களின் அடையாளம், சமூக உருவாக்கம் தொடர்பிலும் தமிழ் மொழியிலுள்ள முஸ்லிம் இலக்கியம் பற்றியும் பேராசிரியர் டார்ஸ்டன் இதுவரையில் நிறைய ஆய்வுகட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்.
தற்போது பேராசிரியர் டார்ஸ்டன் 16ஆம் நூற்றாண்டுக்கும் 19வது நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் மொழியிலான இஸ்லாமிய இலக்கியத்தின் ஆரம்பகால வளர்ச்சியைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்.
இத்தொடரின் படைப்பாளராக உள்ளூர் ஊடகப் பிரபலமான திரு முகம்மது அலியும் கருத்தரங்கை வழிநடத்துபவராக கொள்கை ஆய்வுக் கழக சிறப்பு ஆய்வு ஆலோசகரான திரு அருண் மகிழ்நனும் செயல்படுவார்கள்.
“இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக, இக்கருத்தரங்கு இடம்பெறுவதில் பெருமிதம் கொள்கிறோம். இதில் பெர்லினிலிருந்து நேரடியாக இணைந்து தமிழ்மொழியில் பேசவிருக்கிறார் ஜெர்மானிய பேராசிரியர்.
“சிங்கப்பூரின் பன்முகத்தன்மைமிக்க மரபுடைமையை மக்களுடன் மின்னிலக்க முறையில் பகிர்ந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று தெரிவித்தார் இந்திய மரபுடைமை நிலையத்தின் காப்பாளர் குமாரி நளினா கோபால்.
நாளை மறுதினம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ‘ஸூம்’ கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் https://peatix.com/event/1670452 எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.