தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளைக் கைகளில் வாங்கிப் பார்த்த ஷாஷனா ஏஷ்லி இயந்திராவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. ஓடிச் சென்று அம்மாவை அணைத்துக்கொண்டார்.
மகள் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்ற முடிவோடு, அவளைச் சமாதானப்படுத்த சிரித்தமுகத்துடன் அவளை அணைத்து ஆறுதல் தெரிவித்தார் அம்மா.
அப்போது, கைகளில் பிடித்திருந்த தேர்வு முடிவுகளைக் காட்டி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல தான் தகுதிபெற்றுவிட்டதாக ஷாஷனா கூறவும், தாயார் ஜெகதீஸ்வரிக்கும் அளவற்ற மகிழ்ச்சியில் கண்ணீர் பெருகியது.
“என் மகளுக்கு இது ஒரு பெரிய சாதனை. இத்தனை சிரமங்களிலும் 136 மதிப்பெண்கள் வாங்கிய எனது மகளைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்,” என்று உணர்ச்சிமேலிட, கண்ணீர் மல்க கூறினார் 35 வயது ஜெகதீஸ்வரி.
கற்றல், எழுதுதல், வாசித்தல் ஆகிய மூன்று அடிப்படைக் காரியங்களைச் செய்யவும் ஷாஷனா எஷ்லி இயந்திரா போராட வேண்டும். “ஏன் வாக்கியங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை? ஏன் வார்த்தைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன?” என்று புரியாமல் தடுமாறிய ஷாஷனாவுக்கு ‘டிஸ்லெக்சியா’ எனும் கற்றல் குறைபாடு இருப்பது அவரது ஒன்பதாவது வயதில்தான் கண்டறியப்பட்டது.
அதற்கு பிறகு வந்த சவால்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் பயிலும் ஷாஷனாவின் கல்விப் பயணத்தை கடினமான ஒன்றாகியது. தன்னம்பிக்கை குறைய, தாழ்வு மனப்பான்மை அதிகரிக்க மனக்கவலைகளும் பதற்றங்களும் கூடின.
“இதனாலேயே ஷாஷனாவுக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. அவளுக்கு குறைபாடு இருப்பது எனக்குத் தெரியவில்லை. அவள் மெதுவாகப் படிப்பவள் என்றே நினைத்தேன். தெரிந்த பிறகு சிறப்பு உதவிகளை நாட வசதியும் இல்லை. அவளாகவே முயற்சி எடுத்துப் படிக்கிறாள். நிறைய நூல்கள் வாசிப்பாள், பேப்பர் வாசிப்பாள்,” என்றார் பாதுகாவல் துறையில் பணிபுரியும் அவரது தாயார்.
ஷாஷனாவுக்கு உயர்நிலையில் பயிலும் இரு அக்காமாரும் தொடக்கநிலையில் பயிலும் இரு தங்கைகளும் உள்ளனர்.
வாக்கியத்தை எழுத்துக்கூட்டி படிக்கவே மிகவும் சிரமப்படும் ஷாஷனாவுக்கு ஆங்கிலம், தமிழ் மொழிகளைப் படிப்பது பெரும் சவாலாக இருந்தது. அவரது தமிழ் ஆசிரியர் திரு பூபதி தியாக ராஜன் ஷாஷனாவின் குறைபாட்டைப் பற்றியும் அவளது மற்ற பிரச்சினைகளை பற்றியும் நன்கு அறிந்தவர். ஷாஷனாவுக்கு ஏற்ற வகையில் கற்றல் முறையை மாற்றி அவரை ஊக்குவித்து வந்தார்.
“ஷாஷனா சிறந்த மாணவி. அவரின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் பார்த்து அவருக்கு இன்னும் சிறந்த முறையில் கற்பிக்கவேண்டும் என்ற ஊக்கம் எனக்கு பிறந்தது. ஷாஷனா கேட்டல் கருத்தறிதல், வாய்மொழி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்பார்.
“கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துக்களைக் கண்டறிவதிலும், வாசிப்பு திறனை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டார். தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வில் அவர் காட்டிய முன்னேற்றம், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்,” என்றார் திரு பூபதி.
“ஆக்கபூர்வமான அணுகுமுறைகொண்ட ஷாஷனா, உதவி கேட்கவோ, ஆசிரியர்களிடமிருந்து தெளிவு பெறவோ தயங்குவதில்லை. தடைகளைச் சந்திக்கும்போது துவண்டுவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கும் அவரது சுபாவம் என்னை எப்போதும் நெகிழ வைக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘டிஸ்லெக்சியா’ குறைபாட்டுடன் ஷாஷனாவுக்கு சிறு வயதிலேயே வாழ்க்கையிலும் பலவிதங்களிலும் பல்வேறு துயரங்கள்.
அவர் உடல் ரீதியாகவும் பல துன்பங்களை எதிர்கொண்டுள்ளார். இதனால் ஷாஷனா எளிதில் சோர்வடைந்து விடுவார். துயரங்களைக் கடந்து செல்வதற்கு இலக்குகளே உதவுகின்றன.
பிஎஸ்எல்இ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவரின் முதல் இலக்கு. வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவுக்குத் தகுதிபெற்றுள்ள அவர், தீவிரமாகப் படித்து, வழக்கநிலை ஏட்டுக்கல்விக்குத் தகுதி பெறுவதை அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார். விலங்கு மருத்துவராகப் பட்டம் பெற வேண்டும் என்பது விலங்குகள் மீது மிகுந்த அன்புகொண்டிருக்கும் ஷாஷனாவின் வாழ்க்கை இலட்சியம்.
டிஸ்லெக்சியா
‘டிஸ்லெக்சியா’ என்பது கற்றல் திறன், மொழித் திறன் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு கற்றல் குறைபாடு. ‘டிஸ்லெக்ஸியா’ பிரச்சினையுள்ள பிள்ளைகளுக்கு வாசித்தல், எழுதுதல், எழுத்துக்கூட்டுதல், பேசுதல், கணிதம் ஆகியவற்றில் சிரமங்கள் இருக்கும். இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். சில பிள்ளைகளுக்கு வாசித்தலிலும் எழுதுவதிலும் பிரச்சினைகள் இருக்கலாம், சிலரால் புதிய சொற்களை, அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம். குறிப்பாக, மொழியைக் கற்றுக் கொண்டு பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய இந்தச் சிரமங்க ளால் பெரும்பாலான பிள்ளைகளின் கல்வி பாதிப்படையும்.