ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் ‘ஏ-ஸ்டார்’ தகுதியுடன் 258 புள்ளிகள் பெற்ற நார்த்லாந்து தொடக்கப்பள்ளி மாணவர் சுமன்யுவிற்கு பெரும் மகிழ்ச்சி தந்தது தமிழ்ப் பாடத்தில் ‘ஏ’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றது.
அவரின் பெற்றோர் இருவருமே தமிழ் படிக்காதவர்கள். மருத்துவரான தாயார் வட இந்தியர். தந்தை பள்ளியில் மலாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பயின்றவர். வீட்டில் தமிழ் புழக்கமில்லை. எனினும், தன்முனைப்பாலும் ஆசிரியர்களின் ஆதரவாலும் தமிழில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளார் சுமன்யு.
“பல சொற்களை மனப்பாடம் செய்து எழுத்துத் தமிழை மேம்படுத்த முடிந்தது. ஆயினும், பேச்சுத்தமிழில் சிரமப்பட்டேன். பாட்டியுடன் அடிக்கடி பேசியதால் பேச்சுத்தமிழும் மேம்பட்டது,” என்றார் சுமன்யு.
“தொடக்கநிலை 1ல் அவனை இந்தி வகுப்பில் சேர்ப்பதா, தமிழ் வகுப்பில் சேர்ப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டபோது, சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக உள்ளது. அவனுக்குத் தமிழைப் பேசிப் பழக வாய்ப்புள்ளது. பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் சுமன்யு அதைப் பள்ளியிலேயே தீர்த்துக்கொள்ளலாம். எனவே, தமிழைத் தேர்வு செய்தேன்,” என்றார் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட சுமன்யுவின் தாயார் பூஜா ஜெயகோபி, 45,
சுமன்யுவின் வெற்றிக்கு அவரது கட்டொழுங்கு காரணம் எனக்கூறிய தந்தை ஜெயகோபி ஜெயராம், 50, “சுமனை வழிகாட்டும் ஒவ்வொரு முறையும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
தமது பள்ளியின் சட்டாம்பிள்ளையாக இருக்கும் சுமன்யுக்கு அறிவியல் மிகவும் பிடித்த பாடம். “புரிந்தால்தான் அறிவியல் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெறமுடியும். அந்த சவால் எனக்குப் பிடிக்கும் என்ற சுமன்யு ராஃபிள்ஸ் உயர்நிலைப்பள்ளியில் சேர விரும்புகிறார். உயர்நிலைப் பள்ளில் உயர் தமிழ் படிக்கத் திட்டமிட்டிருப்பதோடு, சிறந்த தேர்ச்சி பெறவும் இலக்குக் கொண்டிருக்கிறார்.
மலையாளம் பேசும் வீட்டுச் சூழலில் வளர்ந்த கிரீண்டேல் தொடக்கப்பள்ளி மாணவன் விஷ்ணு சுபினுக்கு, சுயமாக தமிழைக் கற்றதில் அதுவே அவருக்குப் பிடித்த பாடமாகிவிட்டது. தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் தமிழ் உட்பட நான்கு பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சியுடன் 241 புள்ளிகளைப் பெற்றதில் விஷ்ணுவுக்கு மகிழ்ச்சி.
“தொடக்கத்தில் எனக்கு தமிழே தெரியவில்லை. ஆயினும், என் ஆசிரியர்கள் மற்றும் துணைப்பாட ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் இவர்.
சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்களை அடிக்கடி அணுகுவார். “தயக்கத்தால் தோல்வி ஏற்படலாம் என்ற எண்ணமே என்னைத் தொடர்ந்து கேள்வி கேட்க வைத்தது,” என்றார் ஓய்வு நேரத்தில் காற்பந்து விளையாடும் இந்தச் சிறுவன்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் ஆசிரியர்களை நேரடியாக அணுக முடியாததால் ஒருவித அச்சத்தை உணர்ந்ததாகக் கூறிய சுபின், பெற்றோர் தந்த ஆதரவு பெரிதும் உதவியதாகத் தெரிவித்தார். “மகனை தனியே தவிக்கவிடாமல் என் மனைவியும் நானும் அவனை கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்,” என்று அரசாங்க ஊழியரான அவரது தந்தை சுபின் சங்கரன் குட்டி, 45, தெரிவித்தார்.