தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் (கிழக்குக் கல்லூரி) தாதிமைத் துறையில் சான்றிதழ் பெற்றுவிட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஈராண்டுகளாக அறுவை சிகிச்சைப் பிரிவில் தாதியாகப் பணியாற்றியவர் குமாரி ஜெ.ஜசிந்தா, 27.
சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுடன் இணைந்து செயல்படுவது என்றால் ஜசிந்தாவுக்கு அளவில்லா ஆனந்தம்.
மருத்துவ சிகிச்சைக்காக வரும் பிள்ளைகளுடன் இவர் அன்புடன் உரையாடி அவர்களை மகிழ்விக்க முற்படுவார். ஆனால் அவர்களை நோயாளிகளாகப் பார்ப்பது இவரது மனதிற்கு ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை.
மகிழ்ச்சியான சூழலில் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம், ஜசிந்தாவை ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை மாற்றம் செய்யத் தூண்டியது.
வேலை தேடும் இணையத் தளத்தில் பாலர் பள்ளி துணை ஆசிரியருக்கான வேலைக்கு விண்ணப்பித்து புதிய துறையில் இவர் கால்பதித்தார்.
அங்கு மழலையர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் இவர் சொல்லிக் கொடுத்தார்.
புதிய சவாலுக்கு இணங்க, இரண்டு வயதிற்கும் கீழ் உடைய குழந்தைகளைப் பராமரிக்கும் Tots and Teddies எனும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.
குழந்தைகளைப் பராமரிப்பதற்கான சான்றிதழுக்குப் பயின்று, அவர்களைப் பராமரிக்கும் ஆசிரியராக கடந்த மூன்று ஆண்டுகளாக இவரது பயணம் நீடிக்கிறது.
குறுகிய காலத்திலேயே தனித்துவ வேலையிடப் பண்புகள் இவரிடம் வெளிப்பட்டன. உதாரணத்திற்கு, குழந்தைகளுடன் அணுக்கமாகச் செயல்படுவது இவருக்கு இயல்பான ஒன்றாக அமைந்தது.
குழந்தைகளிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல் ஒரு விஷயத்தைச் செய்வதால் அதன் பின்விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்வார் ஜசிந்தா.
பெற்றோரிடம் குழந்தைகளின் மேம்பாடு, தேவை குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் ஜசிந்தாவுக்கு, இவ்வாண்டின் நம்பிக்கையளிக்கும் ஆரம்பகால பாலர் கல்வி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் 2013ஆம் ஆண்டிலிருந்து வழங்கும் இந்த வருடாந்திர விருதுகளில் இவ்வாண்டு மொத்தம் 25 சிறந்த ஆரம்பகால கல்வி ஆசிரியர்களும் பள்ளிகளும் அங்கீகரிக்கப்பட்டன.
“குழந்தைகள் எனது பராமரிப்பில் வளர்ந்து முதல் வார்த்தைகள் சொல்லும்போது அல்லது சுயமாக உணவு உண்ணும்போது, பணியை நன்கு ஆற்றியுள்ளோம் என்ற திருப்தி கிடைக்கிறது.
“கொடுக்கப்பட்ட பணியைச் சரியாக செய்கிறேன் என்பதற்கு இவ்விருது ஓர் அங்கீகாரம். ஆரம்பகால கல்வித் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டு குழந்தைகளைப் பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முனைவது எனது இலக்கு,” என்று ஜசிந்தா சொன்னார்.