விடுமுறையின்போதும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது பற்றி நினைக்கவே முடியாதபடி செய்துவிட்டது கொவிட்-19 நோய்ப் பரவல். இத்தகைய சூழலில், உள்ளூரிலேயே சுற்றுலா சென்று இன்புறவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுவதோடு, முடங்கிப்போன சுற்றுப்பயணத் துறைக்கும் புத்துயிர் அளிக்கிறது ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ எனும் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகள்.
ஒரு தாயின் விருப்பம்
பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரிலே சொகுசு ஹோட்டலில் தங்கி விடுமுறையைக் கழிப்பது என்பது பெரும்பாலானோர் செய்யாத ஒன்று. பொதுவாக வெளிநாட்டிற்குச் செல்வது அல்லது சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவர். ஆனால் 37 வயதான திருமதி புவனா ராமலிங்கத்திற்கு ‘ஸ்டேகேஷன்’ என்பது மிகவும் பரிச்சயமான ஒன்று.
சிங்கப்பூர் அஞ்சல்துறையில் வேலை செய்துவந்த தம் தந்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வோர் ஆண்டும் குடும்பத்தினர் அனைவரையும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதை திருமதி புவனா நினைவுகூர்ந்தார்.
“விடுமுறை நாள்கள் வந்தாலே ஹோட்டல்களுக்குச் சென்று, அங்குள்ள நீச்சல்குளத்தில் விளையாடுவது, ஹோட்டல் அறையில் இருக்கும் குளியல் தொட்டியில் விளையாடுவது என உற்சாகத்துடன் இருப்பேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் குளிரூட்டி இல்லை. ஹோட்டல் அறை குளுகுளுவென இருந்தது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சிறு வயதில் பெற்றோர் அழைத்துச் சென்ற இடங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியுடன் சென்று, கவலையின்றி நேரத்தைக் கழித்தேன். இப்போது அதே மகிழ்ச்சியை என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்,” என்றார் திருமதி புவனா.
இவருக்குத் தொடக்கப் பள்ளியில் பயிலும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பள்ளி விடுமுறை நாள்களில் அவர்களுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த இவருக்குத் தக்க சமயத்தில் கைகொடுத்தன ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகள்.
இம்மாதம் 14ஆம் தேதி தம் கணவர், பிள்ளைகள், பெற்றோர் என குடும்பத்தினர் அனைவருடனும் நான்கு நட்சத்திர ஆர்ச்சர்ட் ஹோட்டலில் மூன்று நாள், இரண்டு இரவு தங்கி, இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தார்.
அத்துடன், கடந்த ஒரு மாதமாக புக்கிட் தீமா மலை உச்சி, கம்போங் லோரோங் புவாங்காக், சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா, மெக்ரிச்சி நீர்த்தேக்கம் என, சிங்கப்பூரின் பல இடங்களுக்கும் இவர்கள் சென்று வந்தனர்.
“சிங்கப்பூரிலேயே நான் கண்டு இராத பல இடங்கள் உள்ளன. என் மகள் மேனகா பார்த்திபன் தொடக்க நிலை நான்கில் பயின்றபோது சமூக அறிவியல் பாடத்தில் சிங்கப்பூரின் சிறப்புமிக்க இடங்களைப் பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதற்காக அந்த இடங்களுக்கு நேரடியாக அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தேன். அவர்களுக்கு அந்தச் சுற்றுலா மிகவும் பிடித்திருந்தது. அப்போதுதான் குடும்பமாகச் சேர்ந்து நிறைய இடங்களுக்கு செல்லத் தொடங்கினோம்.” என்று சொன்னார் திருமதி புவனா.
இன்னும் பல மாதங்கள் வெளிநாட்டிற்குச் செல்ல முடியாமல் போகலாம் என்பதால், ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி, பள்ளி திறப்பதற்குமுன் கோனி தீவு, செயின்ட் ஜான்ஸ் தீவு போன்ற இடங்களுக்கும் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.
தனியே தன்னந்தனியே...
பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது தான் மகிழ்ச்சி பன்மடங்காகும் எனக் கூறுவர். ஆனால், தனிமைதான் தமக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறுகிறார் குமாரி சரிகா நிஷாய்னி, 24 (படம்).
பல ஆண்டுகளாகத் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சரிகா. பல நாடுகளின் இயற்கை வளங்கள், பல்வகை கலாசாரங்கள், அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறைகள் போன்றவற்றைப் பார்த்து அறிந்துகொள்வது இவருக்குப் பிடித்தமான ஒன்று. அவ்வகையில், கடந்த மார்ச் மாதம் வியட்னாம் சென்று வந்தார் இவர்.
இப்படி எப்போதும் துறுதுறுவென வெளியே சுற்றிக்கொண்டிருந்த இவரை, வீட்டிற்குள்ளேயே மூன்று மாதகாலம் முடக்கிப்போட்டது நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம்.
ஆயினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் உள்ளூரிலேயே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட சரிகா ஆயத்தமானார்.
நண்பர்களும் மற்றவர்களும் செல்லும் இடங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து அங்கு கால்நடையாகவே செல்லத் தொடங்கினார். இப்படி நடந்தே செல்வதால் முழுமையாகச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதோடு உடற்பயிற்சியும் செய்ததுபோல் இருக்கும் என்கிறார் இவர். அண்மையில் ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டைக் கொண்டு சிங்கப்பூர் அறிவியல் மையத்தின் பல கண்காட்சிகளுக்குச் சென்று வந்தார்.
பாறையேற்றம், ‘கயாக்’ படகோட்டம், சாங்கியில் உள்ள ஜுராசிக் மைலுக்குப் பயணம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மிதிவண்டி ஓட்டுதல் என, கடந்த இரு மாதங்களில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட சரிகா, சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சரிகாவிற்கு பல நாடுகளின் உணவு வகைகளைச் சுவைத்துப் பார்க்க ஆசை. கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரிலேயே பிற நாட்டின் சிறப்புமிக்க உணவு வகைகளை விற்கும் உணவகங்களைத் தேடிச் சென்று, அந்த உணவு வகைகளைச் சுவைத்து வருகிறார்.
அடுத்ததாக சிங்கப்பூர் மரபுடைமைச் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சரிகா, “சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் என்னைப் போன்ற பலருக்கு நம் நாட்டில் உள்ள இடங்களின் முக்கியத்துவம், வரலாறு பற்றி அதிகம் தெரிவதில்லை. கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம் நாட்டிலுள்ள பொக்கிஷங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.” என்றார்.
அம்மாவின் முகம் மலர, பிள்ளைக்கு மனநிறைவு
இல்லத்தரசியாக இருந்து வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிடும் அம்மா திருமதி லட்சுமி கோவிந்தராஜை எங்கேனும் வெளியே அழைத்துச் செல்லவேண்டும் என்று, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் 27 வயது பரதன் சந்திரசேகரனுக்கு (படத்தில் அம்மாவுடன்) ஆசை. இந்த டிசம்பர் விடுமுறையில், ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டின் துணையுடன் அந்த ஆசை நிறைவேறியது. “என் அம்மாவிற்கு அதிகம் வெளியே செல்வதும் அலைச்சலும் பிடிக்காது. இந்தப் பற்றுச்சீட்டுகள் கிடைத்தபோது இதுவரை சென்றிராத இடத்திற்கு தம்மை அழைத்துச்செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூர் வான்வெளியைப் பார்த்து ரசிப்பது அவருக்குப் பிடிக்கும் என்பதால் சிங்கப்பூர் ராட்டினத்திற்குச் சென்றோம். ராட்டினப் பயணம் ஏறத்தாழ 30 நிமிடங்கள் நீடித்தது. அப்பயணம் அம்மாவிற்கு மிகவும் பிடித்துப்போனது. உயரே செல்ல செல்ல அவரின் முகமும் மலர்ந்தது. அங்கு தெரிந்த கட்டடங்களை அடையாளம் கண்டு என்னிடம் கூறி மகிழ்ந்தார். மறக்க முடியாதபடி அப்பயணம் அமைந்தது,” என விவரித்தார் பரதன்.
முன்பதிவு செய்ய முதியோர்க்கு உதவிக்கரம்
‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகளைப் பெறுவது தொடர்பாக உதவி தேவைப்படும் முதியோர்க்கு நாடெங்கும் உள்ள முதியோர் செயல்பாட்டு மையங்களில் முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. “என் வயதில் உள்ள பெரும்பாலானோருக்கும் இணையம் வழி முன்பதிவுத் தளங்களுக்கு செல்வது எப்படி என்பதுகூடத் தெரிந்திருக்காது. எனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மிக அருகில் இந்த முனையம் அமைந்திருப்பதால் எனக்கு வசதியாக இருந்தது. எந்தவிதமான சுற்றுலாக்களுக்கு செல்லலாம், என்னென்ன இடங்கள் இருக்கின்றன போன்ற ஆலோசனைகளையும் வழங்கினர்,” என்றார் பொங்கோல் முதியோர் செயல்பாட்டு மையத்திற்கு வந்திருந்த திருமதி வெங்கடாச்சலம் அஞ்சம்மாள், 65 (படம்). “இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பேரப்பிள்ளைகளுடன் பயணப்படகில் செல்வோம் அல்லது செந்தோசா தங்குவிடுதியில் சில நாள்கள் தங்குவோம்,” என்றார் இவர்.