பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஹி டிங் ருவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது அவருக்கு மூன்றாவது பிள்ளையாகும். மூன்று, நான்கு ஆகிய வயதுகளில் உள்ள முதல் இரண்டு பிள்ளைகளும் ஆண்கள்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருவாட்டி ஹி, “2020ஆம் ஆண்டின் இறுதி நாளில் மகன் பிறந்திருப்பது மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது,” என்றார்.
“என் சக செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம்மும் திரு லுயிஸ் சுவாவும் என்னைப் பார்க்க வந்தது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது (படம்). என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவமனைப் பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்றும் திருவாட்டி ஹி தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.
திருவாட்டி ஹியும் மற்றொரு செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயீசா கானும் மகப்பேற்று விடுப்பில் இருக்கும்போது, மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்துவது, வீடுகளுக்குச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பது போன்ற அவர்களின் தொகுதிப் பணிகளை கட்சித் தலைவர் சில்வியா லிம், திருவாட்டி ஹியின் கணவர் திரு டெரன்ஸ் டான் உட்பட தாமும் உதவ விருப்பதாக கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.