சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இங்கு நடைபெற்ற ஆகப்பெரிய 10 மோசடிச் சம்பவங்களைக் கணக்கிட்டால், 2019ன் முதல் ஆறு மாதங்களில் ஏமாற்றப்பட்ட தொகை $41.6 மில்லியன். 2020ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் இத்தொகை $82 மில்லியன். கிட்டத்தட்ட இருமடங்கு தொகை மோசடிகளால் பறிபோய்விட்டது. ஈராண்டுகளிலுமே ஆக அதிகமாக பதிவான புகார்கள் இணைய வர்த்தக மோசடி தொடர்பானவை. 2019ஆம் ஆண்டின் முதல்பாதியில் இத்தகைய 1,202 மோசடிகள் நிகழ்ந்த நிலையில் 2020ஆம் அதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 2,089ஆக அதிகரித்துவிட்டது. இது 73.9% அதிகம்.
எரியும் நெருப்புக்கு எண்ணெய் உதவுவது போல கொள்ளைநோய் பரவல் காலம் மோசடி சம்பவங்களுக்கு உதவியுள்ளது. 2020ஆம் ஆண்டின் முற்பாதியில் பதிவான 294 இணைய மோசடிச் சம்பவங்கள் கிருமித்தொற்று தொடர்பான முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான், வெப்பமானி போன்றவற்றோடு தொடர்புடையவை. கொவிட்-19 சூழலால் வீட்டிலிருந்தபடியே பலரும் இணையத்தைப் புழங்குவது மோசடிக்காரர்களுக்கு சாதகமாகியுள்ளது என்றார் தகவல் தொழில்நுட்பத்துறையில் 15 ஆண்டுகளாக இருக்கும் திரு விஜய் சங்கர் ராமு, 38.
“தொலைபேசி அழைப்பு, இணையத்தளம் அல்லது வேறு ஏதாவது தொடர்பு முறைகளில் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளை எதிர்நோக்கினால் அதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்கு ‘ஐசிஏ’ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, கடவுச்சீட்டு எண்ணைக் கேட்டு அழைப்பு வரலாம். அரசாங்க அதிகாரி கள் அப்படி கேட்கமாட்டார்கள்,” என்றார் அவர்.
இணைய மோசடி நடந்தபின் குற்றவாளி
களைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம் என்றும் மோசடி நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சாலச் சிறந்தது என்றும் கூறினார் ‘ராஜா & டான்’ சட்ட நிறுவனத்தில் பணியாற்றும் வழக்கறிஞரும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்
சபையின் துணைத் தலைவருமான திரு இரா. சந்திரமோகன், 58.
“உங்களுக்குத் தெரியாத ஒரு நபர் சந்தேகப்படும்படி தொலைபேசியில் அழைத்தால் உடனே அவர்களிடம் சுயவிவரம் எதையும் கொடுக்காதீர்கள். அவர்களின் பெயர், அதிகாரபூர்வ தொலைபேசி எண் ஆகிய விவரங்களை முதலில் சேகரியுங்கள். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர்களை அழையுங்கள். ஆள்மாறாட்டம் செய்யும் நபராக இருந்தால் பெரும்பாலும் இந்த விவரங்களை வழங்கமாட்டார்,” என்றார் அவர்.
பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என்ற போர்வையில் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக ‘எமரால்ட் லா’ நிறுவனத்தின் துணை நிர்வாக பங்காளி யான திரு கித் சூ கூறுகிறார்.
இணைய மோசடிகளை அடுத்து சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. “சமூக ஊடகங்களில் மற்றவர்களுடன் இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களைப் பற்றி தீர விசாரிப்பது நல்லது. வலுவான கடவுச் சொற்களை பயன்படுத்துவது இணையக் குற்றவாளிகள் உங்கள் கணக்கிற்குள் புகமுடியாமல் தடுக்கும்,” என திரு சூ மேலும் கூறினார்.
குற்றங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் கடன் மோசடிகளில் ஈடு படுவோர் சமூக ஊடகம் அல்லது போலி இணையத்தளம் மூலம் உடனே பணம் கிடைக்கும் என நம்பவைத்து ஏமாற்றிவிடுவர். முன்கூட்டியே கட்டணம் ஒன்றைச் செலுத்தச் சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்துவர். அவர்
களின் பேச்சை நம்பி பணம் அனுப்பி ஏமாறு பவர்களும் உண்டு.
“சட்டபூர்வமாக கடன் வழங்குபவர்கள் உங்களை நேரில் சந்தித்து, கடன் வழங்குவதற் கான படிவங்களில் கையெழுத்து கேட்பதுதான் வழக்கம். நீங்கள் கேட்காமலேயே தொலைபேசியில் அழைப்பது, செய்திகள் அனுப்புவது கூடாது,” என்கிறார் வழக்கறிஞர் திரு சிராஜ் ஷேக் அஸிஸ், 31.
“மலிவான விலையில் பொருள், அல்லது பரிசு கிடைக்கிறது என்பதைப் பார்த்து சிந்திக்காமல் அதற்கான இணைப்பை அணுகி, போலி இணையத்தளம் அல்லது நபரிடம் சென்று ஏமாந்துவிடுகிறார்கள்,” என்றார் 22 ஆண்டுகளாக தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் திரு இரா.மாதவன், 45.