1995ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியான லிம் ஷியாவ் ரோங்கைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டபோதிலும் வழக்கு தொடர்பான விசாரணை தொடர்வதாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு போலிசார் உறுதி அளித்துள்ளனர்.
மாண்ட சிறுமியின் தாயாரான 65 வயது திருவாட்டி ஆங் கூன் லே, தங்கையான 27 வயது குமாரி லிம் ஜியா ஹுவீ ஆகியோரை மத்திய புலனாய்வுத் துறைக்கு அதிகாரிகள் நேற்று அழைத்திருந்தனர். அங்கு அவர்களை சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சந்தித்துப் பேசினார்.
இந்த வழக்கு 1995லிருந்து பலமுறை மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவ்விருவரிடமும் அவர் கூறினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தோ பாயோ லோராங் 5 புளோக் 75ல் உள்ள தமது தாயாரின் காப்பிக்கடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் குமாரி லிம்.
குற்றம் நிகழ்ந்த இடம் தொடர்பான சில புகைப்படங்களை அந்த அதிகாரி வைத்திருந்ததாகவும் அவற்றைத் தமது தாயாரிடம் காட்ட வேண்டாம் என்று தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.
“என் அக்கா மாண்ட விதம் மிகவும் கொடூரமானது. ஒரு 7 வயது பெண்ணை ஒருவர் அவ்வாறு மூர்க்கத்தனமாக அடித்துத் துன்புறுத்தியிருப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. என் அக்கா வலியால் எப்படியெல்லாம் துடித்திருப்பார்? உங்கள் பிள்ளை இவ்வாறு கொடூரமான முறையில் மாண்டிருந்தால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. என் குழந்தைக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தாலும் என்னால் தாங்க முடியாது,” என்றார் குமாரி லிம்.
அந்தப் புகைப்படங்களைத் தம்மிடம் காட்டுவதற்கு முன்பு அவை என்னைப் பாதிக்கக்கூடும் ன்று அந்த அதிகாரி எச்சரித்ததாக குமாரி லிம் தெரிவித்தார்.
“புகைப்படங்களைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவை என்னைப் பெரிதும் பாதித்தன. அவற்றில் இருந்த காட்சிகளை என்னால் மறக்கவே முடியாது,” என்றார் அவர்.
சாக்கடையிலிருந்து கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்த நிலையில் தமது அக்காவின் உடல் இருந்ததாகவும் அவரது முகம் முழுவதும் ரத்தமாக இருந்ததாவும், கழுத்தைச் சுற்றி கறுப்பு நிற காயங்கள் இருந்ததாகவும் குமாரி லிம் கூறினார். 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் திருவாட்டி ஆங் தமது காப்பிக்கடையில் வேலையாக இருந்தபோது தமது தந்தையின் நண்பரைச் சந்திக்கப் போவதாகக் கூறி லிம் ஷியாவ் ரோங் சென்றார். அதுதான் தமது மகளைத் திருவாட்டி ஆங் கடைசியாக பார்த்த தருணம். மறுநாள் காலை, ஜாலான் உட்பிரிட்ஜ் அருகில் உள்ள சாக்கடையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.