கொவிட்-19 சூழலுக்குப் பிறகும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை பத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் தொடரக்கூடும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணையம் மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொவிட் -19 சூழலுக்குப் பிறகும் சிங்கப்பூரர்கள் பலர் வெளி யே செல்லும்போது தொடர்ந்து முகக்கவசங்களை அணியக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, கிருமி நாசினி திரவத்தைப் பயன்படுத்துவது, மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்ப்பது, பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ஆய்வு தெரிவித்தது.
இன்க்யூப் என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் நாணயம், இணைய மையத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,606 பேர் பங்கெத்தனர்.
இணையத்தில் நேர்மையுடன் நடந்துகொள்வதை மேம்படுத்த இந்தப் புதிய ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களின் சராசரி வயது 40. அவர்களில் பாதி பேர் ஆடவர்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது.
கொவிட்-19 சூழல் காரணமாக மக்களின் நடத்தையில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி அறிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாகத்தான் சுகாதார விதிமுறைகள் தொடர்வது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன.
பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறை, கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது ஆகிய விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த பத்தில் ஏழு பேர் கூறினர்.
கலைநிகழ்ச்சிகள் போன்ற கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்ல இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த பத்தில் மூன்று பேர் மட்டுமே தெரிவித்தனர்.
வெளியிடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணியும் பழக்கத்தைத் தொடர இருப்பதாக 64 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
கிருமி நாசினி திரவத்தைத் தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக 68 விழுக்காட்டினர் கூறினர்.
வேலைக்கும் பள்ளிக்கும் இணையம் வழி கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்த இருப்பதாக 62 விழுக்காட்டினர் கூறினர்.