பாலிவுட் சாரமும் இந்திய பண்பாட்டு அடையாளங்களும் நிறைந்த ஒரு படைப்பை தமது ‘ஏ’ நிலை மேடை நாடகத் தேர்வுக்காகப் படைத்திருக்கிறார் தெம்பனிஸ்-மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவி நஸீமா.
இவர் உள்ளூர் மேடை நாட கக் கலைஞர் திரு அஹமது அலி கானின் மகள். சிறு வயதிலிருந்தே மேடை நாடகம் என்று கேட்டாலே அது தம் தந்தைதான் என்று நினைத்து வந்த நஸீமாவிற்குத் தொடக்கக் கல்லூரி சென்றதும் மேடை நாடகப் பாடத்தைப் பயில வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மேடை நாடகத்தைப் பற்றி கற்க கற்க, அதன் மீதான ஆர்வம் பெருகியது. ‘ஏ’ நிலை தேர்விற்காக அவரது சொந்தப் படைப்பில் ஒரு நாடகத்தை எழுதி மேடையேற்ற வேண்டியிருந்தது.
இதற்காக ஆராய்ச்சியில் தொடங்கி ஒத்திகைகள் வரை எண்ணற்ற மணிநேரங்களை அர்ப்பணித்து முழுமனதுடன் செயல்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு கொவிட்-19 சூழலின்போது இணையம் வழி கற்றல் தொடங்கியது.
மேடை நாடகத்தை இணையம் வழி கற்பது புதுமையானது மட்டுமல்ல சவால் மிகுந்த ஒன்றாகவும் இருந்தது. ஆசிரியர்களை நேரடியாகப் பார்த்து பேச முடியாத நிலை. நண்பர்களுடன் கலந்துரையாடவும் முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் நஸீமாவை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார் அவரது தந்தை திரு அலி கான்.
‘ஏ’ நிலை தேர்வு நெருங்கியபோது நஸீமாவிற்குப் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. மனதளவில் சோர்வடையும்போதெல்லாம் தமது தந்தையிடம் அரை மணி நேரம் பேசினால் போதும், சோர்வு களைந்து புத்துணர்ச்சி பிறந்துவிடும் என்று அவர் கூறினார்.
மேடை நாடக நடிப்பு வசனங்களை மனனம் செய்வதில் நஸீமா வுக்கு சிரமம் இருந்தது. ஆனால் வசனங்களை மனப்பாடம் செய்வதில் கைதேர்ந்த தந்தையின் உதவியோடு அந்தச் சவாலைக் கடந்து வந்தார்.
பாலிவுட் திரைப்படங்களை மையமாகக் கொண்டு ‘பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடகத்தை இயற்றினாராம்.
தமது குடும்பத்தில் அது போன்ற திருமணங்கள் சாதாரணம், ஆனால் பிற இனத்தவருக்கு இது அவ்வளவு பரிச்சயமில்லாத ஒன்று என்பதை உணர்த்த நஸீமா இதைப் பற்றிய மேடை நாடகம் ஒன்றைப் படைத்தார்.