காலத்திற்கேற்ப மாறிவரும் தமிழ் முரசு நாளிதழின் தற்போதைய அச்சு வடிவம், அதன் சின்னம், 75, 80, 85ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் சின்னங்களை உருவாக்கிய கலைஞரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஓவியப் பிரிவின் தலைவருமான 48 வயது பீட்டர் வில்லியம்ஸ் நேற்று முன்தினம் காலமானார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பிரிந்தது. அவரது மனைவி ஆர்த்தி முல்சந்த் வில்லியம்ஸ், நான்கு மாத மகன் ஸய்ன் இருவரையும் இவர் விட்டுச்சென்றார்.
அயர்லாந்தைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு பீட்டர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வடிவமைப்பையும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இதர செய்தித்தாள்கள், சின்னங்களையும் வடிவமைத்த திறன்மிக்க கலைஞர்.
இவரது மறைவு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2001ஆம் ஆண்டு வடிவமைப்பாளராக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனத்தில் திரு பீட்டர் சேர்ந்தார். அதற்கு முன்னர் அயர்லாந்தில் வரைகலை வடிவமைப்பாளராகவும் வரைகலை வடிவமைப்பைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
படிப்படியாக முன்னேற்றம் கண்டு 2014ஆம் ஆண்டில் ஓவியப் பிரிவின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். 2017ஆம் ஆண்டில் எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் ஓவிய, புகைப்பட, காணொளிப் பிரிவுகளை மேற்பார்வையிட்டு வந்தார்.
தமிழ் மொழியையும் வார்த்தைகளின் அர்த்தங்களையும் அவர் அறியாவிட்டாலும் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழுக்கு மறுவடிவம் கொடுக்கும் முயற்சியில் முழுமையாக திரு பீட்டர் ஈடுபட்டதை நினைவுகூர்ந்தார் தமிழ் முரசின் ஆசிரியர் திரு ஜவஹரிலால் ராஜேந்திரன்.
“நிபுணத்துவம் நிறைந்த அவர் அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே நிறைய கற்றார். முழு வடிவம் கிடைப்பதற்குள் பலமுறை எங்களுடன் மிகவும் பொறுமையாகப் பணியாற்றினார். வேலையைத் தாண்டிய சேவையாகவே இவர் தமிழ் முரசு வடிவமைப்புப் பணியைச் செய்தார்.
“கலாசாரங்களைப் புரிந்து நட்பை உருவாக்கிக்கொண்டார். மிக அருமையான மனிதராக எங்களின் நன்மதிப்பைப் பெற்ற பீட்டருக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார் திரு ராஜேந்திரன்.
முந்தைய ‘மை பேப்பர்’ இதழின் ஓவியப் பிரிவு தலைவர், ‘தப்லா’ வார இதழை வடிவமைத்தது, ‘தி நியூ பேப்பர்’ இதழை வடிவமைத்தது போன்றவை கடந்த ஆண்டுகளில் பீட்டர் ஆற்றிய பணிகள்.
சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 150 ஊடக நிறுவனங்கள் பயன்படுத்திய ‘உலக செய்தி தினம்’ இயக்கத்தின் சின்னத்தை உருவாக்கியவரும் இவரே. தமது சொந்த நேரத்திலேயே அதை வடிவமைத்த இவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைக்காசு நிதியின் சின்னத்தையும் அவ்வாறே உருவாக்கினார்.
தமிழ் முரசு அதன் 75ஆம் ஆண்டு நிறைவை 2010ஆம் ஆண்டில் கொண்டாடியபோது நாளிதழின் அச்சுப் பிரதி, மறுவடிவமைப்புடன் வெளிவந்தது.
புதிய வண்ணங்களில் கண்கவர் வடிவில் வெளியான அந்த வடிவமைப்பைக் கொண்டுவர தமிழ் முரசின் தலைமை உதவி ஆசிரியர் திரு அண்.சிவ. குணாளனுடன் திரு பீட்டர் இணைந்து பணியாற்றினார்.
“திரு பீட்டரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். இன்று நம் கைகளில் தவழும் தமிழ் முரசின் அழகிய வடிவமைப்பு, திரு பீட்டரின் எண்ணத்தில் உதித்தவைதான். 2010ஆம் ஆண்டு தமிழ் முரசின் வடிவமைப்பைப் புதுப்பிக்கும் பணியில் திரு பீட்டருடன் அணுக்கமாகப் பணியாற்றிய இனிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது,” என்று புகழாரம் சூட்டினார் திரு குணாளன்.
“தமிழ் நாளிதழான தமிழ் முரசின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படும்போது தமிழ் சார்ந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் இவர் அறிந்து அதற்கேற்ற முறையில் செயல்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது. அத்துடன் செய்தியைப் படிக்கும் வாசகர்களின் கண்கள் நோகாமல் எழுத்துருவும் பத்திகளும் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதற்கேற்றவாறு எழுத்துருக்களைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தினார். மொத்தத்தில் அனைத்துலகத் தரத்திற்கு ஒப்பான வடிவமைப்பை தமிழ் முரசு கொண்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்,” என்று திரு பீட்டர் பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்தார் திரு குணாளன்.
இளம் தலைமுறையினரை மேம்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர் திரு பீட்டர் என்று கூறினார் தமிழ் முரசின் செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்வரன், 28.
“தமிழ் முரசில் நான் சேர்ந்து அப்போது ஏறத்தாழ ஆறு மாத காலம்தான் இருக்கும். ‘ஏக்கர்ஸ் (ACRES)’ அமைப்பு 51 இந்திய நட்சத்திர ஆமைகளை இந்தியாவிற்குக் கொண்டு சென்ற முயற்சியைப் பற்றிய செய்திக் கட்டுரைக்கான தகவல் வரைபடத்தை உரு வாக்க வழிகாட்டினார் திரு பீட்டர்.
“அந்த செய்தி குறித்த காணொளியையும் தயாரித்தோம். இவர் கொடுத்த தைரியத்தில் காணொளியைத் தயாரித்து, பிறகு அந்தச் செய்திக்கு உன்னத செய்திக்கான விருதும் பெற்றேன். அதுவே செய்தித்துறையில் நான் பெற்ற முதல் விருது,” என்று தமது நினைவலைகளைப் பகிர்ந்தார் திரு வெங்கடேஷ்வரன்.
திரு பீட்டர் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பாளர் என்றும் அழிக்கமுடியாத முத்திரையைப் பதித்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியரும் எஸ்பிஎச் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியருமான திரு வாரன் ஃபெர்னாண்டஸ்.
மின்னிலக்க முறையில் இயங்க ஏதுவாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அலுவலகம் கடந்த 2019ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டபோது, அதன் மறுவடிவமைப்புக்குத் தலைமைத் தாங்கியவர் திரு பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.