சிங்கப்பூரில் புதிதாக 12 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (மார்ச் 1) அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்குவிடுதியிலோ யாருக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை 59,948 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் நேற்று விடுதிவாசி ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 31 வயதான அந்த பங்ளாதேஷ் நாட்டவர் சிங் உட்வொர்க்கிங் நிறுவனத்தில் விநியோக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கிராஞ்சி வேயில் உள்ள ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவர் அவர்.
அவரது வேலையிடத்தில் ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் அவர் கடந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
நேற்று கிருமித்தொற்று பதிவான மற்ற 10 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் இதுவரை 59,808 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒருவர் உட்பட 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக பராமரிப்பு நிலையங்களில் 66 பேர் தேறி வருகின்றனர்.