உலோகத்தால் ஆன செதுக்கும் கருவியால் ஊழியரைத் தாக்கிய முன்னாள் உள்ளூர் நடிகருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹுவான் யிலியாங் என பெரிதும் அறியப்படும் இங் அய்க் லியோங், 59, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாலை 4.30 மணியளவில் பங்ளாதேஷைச் சேர்ந்த திகு ஜஹிடுல் என்பவரை பிராடல் ரோட்டில் இருக்கும் சிங்கப்பூர் இஸ்லாமிக் ஹப்பில் உலோக செதுக்கு கருவி ஒன்றால் இரு முறை அடிவயிற்றிலும் ஒரு முறை தலையிலும் அடித்ததாகக் கூறப்பட்டது.
இதனால் காயமடைந்த திரு ஜஹிடுல்லுக்கு $3,300 இழப்பீடு வழங்குமாறும் இங்குக்கு ஆணையிடப்பட்டது.
ஹைல் என்டர்பிரைஸ் எனும் தண்ணீர்க்குழாய் தொடர்பான வேலை செய்யும் நிறுவனம், ரெட் குரூப் ஸ்டூடியோ எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் இங் இயக்குநராக இருந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி, ஊழியரை அடித்தது தொடர்பான இங் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூர் இஸ்லாமிக் ஹப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த திரு ஜஹிடுல் தம்முடைய கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றாததால் அவர் மீது இங் கோபம் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மீது இங் பிளாஸ்டிக் வாளி, மரக்கட்டை போன்றவற்றை எறிந்ததாகக் கூறினார் திரு ஜஹிடுல். அந்த வாளி தம்முடைய முதுகின் மீது விழுந்ததாகக் கூறிய ஜஹிடுல், பின்னர் தம்முடைய முதலாளி தன்னை உலோக செதுக்கியைக்கொண்டு அடித்ததாக நீதிமன்றத்தில் கூறினார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டும் இங் மீது நிலுவையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி மோகன ராஜ் சரவணன் என்பவருடன் அவர் சண்டையிட்டதாகக் கூறப்பட்டது. அந்த வழக்கு பின்னொரு நாளில் விசாரணைக்கு வரும்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடிகராக இருந்து 3 முறை சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்ற இங், கடந்த 2008ஆம் ஆண்டில் மீடியாகார்ப்பிலிருந்து விலகி தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.