‘சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை’
அமைச்சரவையும் ஒட்டுமொத்த பொதுச் சேவைத் துறையும் தங்களது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க உயரதிகாரிகள் இப்போதும் எதிர்காலத்திலும் சமயப் பாகுபாடு காட்டுவதற்கான சாத்தியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம் நடுநிலையுடனும் நியாயமாகவும் நடந்துகொள்வது மிக முக்கியம் என்றும் இல்லையேல் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் விரைவில் இழந்துவிடும் என்றும் சொன்னார்.
இப்போதைய அரசாங்க உயரதிகாரிகள் எவரேனும் நாணயக் குறைவாக நடந்துகொள்வதற்குச் சான்று இருந்தால், அது தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரு சண்முகம் கூறினார்.
16 வயது கிறிஸ்துவ இளையர் ஒருவர் இரு பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிருந்ததைக் குறிப்பிட்ட திரு சிங், அரசாங்கத்தின் கொள்கை கண்டிப்பாக சமயச் சார்பற்றது எனச் சிங்கப்பூரர்களுக்கு உறுதியளிக்க வேண்டியிருக்கலாம் என்றார்.
அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் சமயப் பற்றுள்ள மனிதர்கள் நுணுக்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதா என்றும் பாட்டாளிக் கட்சித் தலைவரான திரு சிங் கேட்டார்.
அதற்குப் பதிலுரைத்த அமைச்சர் சண்முகம், “சமயச் சார்பின்மைக் கோட்பாடுகளும் சமயங்களுக்கு இடையிலான நடுநிலைத்தன்மையும் சிங்கப்பூரின் கொள்கைகளை வகுக்கும் பொன்னிழைகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. அதுவே சிங்கப்பூர் இன்றுள்ள நிலைக்கு முக்கிய காரணம்,” என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்க உயரதிகாரிகள் தங்களது சமயத்தின் அடிப்படையில் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளக்கூடும் எனும்படியாக திரு சிங்கின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் இப்போதைய அரசாங்க உயரதிகாரிகள் நாணயமாகவும் நேர்மையாகவும் பொதுச் சேவையாற்ற தங்களது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து இருப்பதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
எல்லாருமே புனிதராக இருப்பர் என எதிர்பார்க்க முடியாது என ஒப்புக்கொண்ட அவர், சில வேளைகளில் ஒரு சிலர் தங்களது சமய நம்பிக்கை அல்லது தனிப்பட்ட அபிப்பிராயத்தின் அடிப்படையில் சிலவற்றைப் பார்க்கக்கூடும் என்றும் கூறினார். அது அமைச்சர்கள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரை என எல்லாருக்கும் பொருந்தும் என்றும் அவர் சொன்னார்.
இதையடுத்து, ஒரு சில அரசாங்க உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் என்றோ, அவர்களின் பணியையும் மனஉறுதியையும் குறைத்துச் சொல்லும் எண்ணமோ இல்லை என்றும் திரு சிங் தெளிவுபடுத்தினார்.
சமயச் சார்பின்மை மீதான தனது கடப்பாட்டை அரசாங்கம் மறுஉறுதிப்படுத்தச் செய்வதே தமது நோக்கம் என்றும் அவர் சொன்னார்.
ஓரின, இருபாலின, திருநங்கை (LGBT) சமூகத்தினர் மீதான பாகுபாடு குறித்தும் திரு சிங் கவலை தெரிவித்தார். ஆடவர் ஒருவர் அந்தச் சமூகத்தைக் குறிக்கும் கொடியை ஓர் உணவகத்தின் ஊழியர்கள் மீது எறிந்து, அவர்களைப் பழித்த சம்பவத்தை திரு சிங் சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து, தங்களின் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், சிங்கப்பூரில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்படுவர் என்றும் சமமாக நடத்தப்படுவர் என்று அமைச்சர் சண்முகம் உறுதியாகத் தெரிவித்தார்.
எந்த ஒரு பாலினச் சமூகத்தையும் அல்லது சமயத்தினரையும் இழிவாகப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
சமூக நல்லிணக்கம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற திரு சிங்கின் யோசனைக்கு, அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை நிராகரிப்பதற்கு இல்லை என திரு சண்முகம் தெரிவித்துள்ளார்.