உள்துறைக் குழு தனது செயல்முறை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால், சிங்கப்பூர் போலிஸ் படை அடுத்த சில ஆண்டுகளில் தீவெங்கும் இன்னும் அதிகமான போலிஸ் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் என்று தெரிவித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், போலிஸ் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் கடந்த டிசம்பர் வரை 4,900 குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டன என்றும் விவரித்தார்.
கடந்த 2012 முதல், கிட்டத்தட்ட 90,000 போலிஸ் கண்காணிப்பு கேமராக்கள் பிரதான பொது இடங்கள், வீடமைப்புப் பேட்டைகள், அக்கம்பக்க மையங்கள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ளன என்று திரு சண்முகம், உள்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கூறினார்.
“போலிஸ் கண்காணிப்பு கேமராக்கள் உள்ள இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
“அதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் அதிகமான போலிஸ் கண்காணிப்பு கேமராக்கள் தீவு முழுவதும் பொருத்தப்படும்,” என்றும் அமைச்சர் சொன்னார்.
உள்துறைக் குழுவின் மற்ற அமைப்புகள் பற்றி பேசிய திரு சண்முகம், “தனது தரவு நிலையங்களை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு, அதற்கென சில நூறு அறிவியலாளர்கள், பொறியாளர்களை அடுத்த சில ஆண்டுகளில் பணியமர்த்தும்.
“மருத்துவ அவசரநிலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அதிகமான மருத்துவ வாகனங்களும் அதிகாரிகளும் தேவைப்படுகின்றனர்.
“அதிக குற்றச்செயல்கள் நடைபெறக்கூடிய இடங்களில் சுற்றுக்காவலை அதிகரிக்கவும் நிகழக்கூடிய பயங்தரவாதத் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் போலிஸ் படைக்கு அதிகமான அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.