சிங்கப்பூர் முழுவதும் 800க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள தானியக்க இயந்திரங்களிலிருந்து சிங்கப்பூர்வாசிகள் நேற்று முன்தினம் முதல் இலவச முகக்கவசங்களைப் பெற்று வருகின்றனர்.
சமூக நிலையங்கள், குடியிருப்பு வட்டாரங்கள் உட்பட முகக்கவசங்களை விநியோகிக்கும் இயந்திரங்கள் தீவு முழுவதும் இடம்பெற்றுள்ளன.
“ஈரடுக்குகளைக் கொண்ட முகக்கவசங்கள் இரண்டு வகையில் பாதுகாப்பு அளிக்கும். வெளிப்புறத்தில் நீர் புகாத அடுக்கு இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் உள்ள அடுக்கு அணிந்திருப்பவரின் எச்சிலிலிருந்து வெளியாகும் நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மை கொண்டது,” என்று இம்மாதம் 19ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் தெமாசெக்கின் தலைமை நிர்வாகி ஹோ சிங் தெரிவித்திருந்தார்.
சுவிட்சர்லாந்தின் லிவிங்கார்ட் நிறுவனம் தயாரித்துள்ள முகக்கவசங்கள் கழுவக் கழுவ நுண்ணுயிர் மற்றும் கிருமிக்கு எதிரான ஆற்றலை இழந்துவிடும். அன்றாடம் பயன்படுத்தினாலும் வாரத்திற்கு ஒரு முறை கழுவினால் போதும். இப்படி முறைப்படி கழுவினால் ஏழு மாதங்கள் வரை முகக் கவசங்களைப் பயன்படுத்த முடியும். குளிர்ந்த நீரில் கையால் முகக்கவசத்தைக் கழுவ வேண்டும். ‘பிளிச்’ அல்லது கிருமி நாசினியைப் பயன்படுத்தக் கூடாது.
கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசங்கள் ஒரு கேடயமாகச் செயல்படுவதால் தெமாசெக் அறநிறுவனம் 4வது முறையாக இம்முறையும் இலவசமாக முகக்கவசங்களை நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு விநியோகம் நடைபெறும்.
ஆங்கர்வேல் சமூக நிலையத்தில் நேற்று தனக்கும் தனது குடும்பத்துக்கும் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட ஹெலன் வோங், 70, புதிய முகக்கவசம் சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் ஆபத்தான மக்கள் நெரிசல்மிக்க இடங்களில் இதனை பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். தெமாசெக்கின் முகக்கவசங்கள் சிறிய, நடுத்தர, பெரிய, கூடுதல் பெரிய ஆகிய நான்கு அளவுகளில் விநியோகிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான சிறிய அளவிலான முகக்கவசங்களை சமூக நிலையங்கள், மன்றங்கள், பிளாசா சிங்கப்பூரா, தெமாசெக் அறநிறுவனம் போன்ற இடங்களில் பெறலாம். முன்பு விநியோகிக்கப்பட்ட முகக் கவங்களிலிருந்து தற்போதைய முகக்கவசம் அளவில் மாறுபட்டு இருப்பதால் பார்த்து வாங்க வேண்டும் என்று தெமாசெக் அறிவுறுத்தியுள்ளது.