தலைசிறந்த இளம் செய்தியாளர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இருவரில் நானும் ஒருவன். கடந்த புதன்கிழமை நடந்த விருது வழங்கும் மெய்நிகர் நிகழ்ச்சியில் வெற்றி யாளராக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் சூ யுன் டிங் அறிவிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவில் உள்ள செய்தித்தாள்கள் அனைத்திலும் பணியாற்றும் நூற்றுக்கணக்கான செய்தியாளர்களில் அடையாளம் காணப்பட்டு, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இருவரில் நானும் ஒருவன் என்பதில் பெருமகிழ்ச்சி.
முதன்முறையாக இந்த விருதுக்கு தமிழ் முரசு செய்தியாளர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை அறிந்து தமிழ் முரசு நிர்வாகம், ஊழியர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
பல ஊடகங்களில் இருந்தும் ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்த பட்சத்தில் செய்தி அறிவு, தொடர்புத் திறன், சுவாரசிய செய்தித் திட்டம் தீட்டுதல், வர்த்தக மேம்பாடு, நிர்வாகம், மின்னிலக்க முறை மாற்றம் போன்ற பல்வேறு அம்சங்களில் சென்ற ஆண்டு ஆற்றிய பங்களிப்புகளைச் சீர்தூக்கி அதில் முன்னணி இளம் செய்தியாளராக உருவெடுத்ததில் பெருமை கொள்கிறேன்.
இதில் இருமொழி ஆற்றல் முக்கிய பங்காற்றியது. ‘வினாக்களை சுமக்கும் நினைவகம்’ எனும் எனது செய்தியும் ‘2020க்கான தலைசிறந்த செய்தி’ எனும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தமிழ் முரசு செய்தியாளர்களாக ‘தப்லா!’ ஆங்கில வாரயிதழுக்கும் எழுதும் எங்களுக்கு அவ்வப்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதும் வாய்ப்பும் கிட்டுகிறது.
சென்ற ஆண்டு ஊடகத் துறைக்கு முக்கிய மைல்கல்லாக இருந்தது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொவிட்-19 நோய்ப் பரவல் தலை விரித்தாடியது.
அடுத்ததாக சிங்கப்பூரின் பொதுத் தேர்தல். பொதுத் தேர்தல் செய்திகளை சேகரித்து வெளியிட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் திட்டம் வகுத்த நிலையில் தமிழ் முரசிலிருந்து இரு செய்தியாளர்கள் அந்த அணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் ஒருவராக இடம்பெற்றதில் எனக்கு நல்ல அனுபவம் கிட்டியது.
சிறிய நாளிதழில் தாய்மொழியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் எழுதி வந்த எங்களுக்கு பெரிய நாளிதழில் பரந்த அளவில் அனைத்து சமூகத்தினருக்கும் எழுதும் அனுபவமும் பயிற்சியும் கிடைத்தது சுவாரசியமாக இருந்தது. இன்னும் அவ்வப்போது அந்த நாளிதழுக்கு எழுதி வருகிறேன்.
செய்தியாளர் என்ற முறையில் செய்தி சேகரித்து எழுதுவது மட்டுமின்றி நாளிதழின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை வரைந்து அவற்றைச் செயல்படுத்தவும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
அதற்கு ஆசிரியர் குழு பக்கபலமாக இருந்ததுடன் சுதந்திரமாக நான் இயங்க நம்பிக்கையும் அளித்தது.
தமிழ் சார்ந்த துறையில் பணி புரிந்தாலும் தரத்தில் குறையின்றி பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம். இல்லையெனில் இதுபோன்ற பொது தளத்தில் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதே சிரமமான ஒன்றுதான் என்று பலர் கூறக் கேட்டுள்ளேன்.
செய்தியாளர்களுக்கு வளர்ச்சிப் பாதையை எஸ்பிஎச் நிறுவனம் சமமாக வகுத்துள்ளது. திறன்மிக்கவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சி அடைய முடியும் என்பது இதற்குச் சான்று.
“ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் கடுமையான போட்டியை எதிர்நோக்கு கிறோம். தமிழ் முரசு இறுதிச் சுற்றுக்குப் பரிந்துரைக்கப்படுவதே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மற்ற செய்தித்தாள் பிரிவுகளைப்போல அல்லாது தமிழ் முரசு மிகச் சிறிய ஒரு பிரிவு. இங்குள்ள செய்தியாளர்கள் அச்சுப் பிரதியில் மட்டும் கவனம் செலுத்தாமல் இணையப் பக்கத்திலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இர்ஷாத்தின் இரு பரிந்துரைகளும் செய்தித் துறையில் அவர் கண்ட வளர்ச்சியை பறைசாற்றுகின்றன.”
- தமிழவேல், செய்தி, மின்னிலக்க ஆசிரியர், தமிழ் முரசு