தமிழ் முரசு நாளிதழின் நிறுவனரும் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 118வது பிறந்தநாள் இன்று. அதனையொட்டி, தமிழவேள் சாரங்கபாணியுடன் அணுக்கமாகப் பழகிய அனுபவமுடைய அவரது ‘தளபதி’ என்று தம்மை பெருமையுடன் அடையாளப் படுத்திக்கொள்ளும் 80 வயது திரு ப. தியாகராஜன் இன்றைய தினத்தை இனிப்புடன் கொண்டாட உள்ளார்.
லிட்டில் இந்தியாவின் மையப் பகுதியில் எண் 143 டன்லப் ஸ்திரீட் முகவரியில் புதிதாக உதயமான தமிழ் புத்தகக் கடையில் இன்று காலை 11 மணியிலிருந்து இனிப்புப் பண்டங்களை வழங்கி பொது மக்களுக்கு தமிழவேள் பற்றிய விளக்கங்கள் அளிக்க இருப்பதாக அவர் கூறினார்.
“தமிழவேளின் பிறந்தநாள் கொண்டாடப்படவேண்டிய தினம் என்பது மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினருக்கு அந்த சமூகத் தலைவரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனையவேண்டும் என்ற ஆசை எனக்கு,” என்றார் திரு தியாகராஜன்.
தமிழவேள் வழிநடத்திய தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டுள்ளது மட்டுமல்லாமல் தொண்டர் என்ற முறையில் அவருக்கான உதவிகளைப் பக்கத்தில் இருந்தே செய்துள்ள நினைவலைகளைப் பகிர்ந்தார்.
“சிங்கப்பூரில் இந்தியர்களின் நலனுக்காகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் முரசு, தமிழவேளின் பங்களிப்பு ஏராளம்,” என்று புகழாரம் சூட்டிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழவேளும் நானும்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
1903ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விஜயபுரத்தில் பிறந்த தமிழவேள் சாரங்கபாணி, 1924ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.
“இந்நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு இந்தியர்களை அவர் ஊக்குவித்தார். சீர்திருத்தச் சிந்தனை கொண்ட அவர், தமது கருத்துகளைக் கொண்டு சமூகத்தின் எழுச்சிக்காக ஊடகம் மூலம் பரப்பினார்,” என்று கூறினார் தமிழ் முரசில் 1958ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் திரு. எம் நடராசன், 81.
“சீர்திருத்தம், முன்னேற்றம், தமிழ் முரசு, தேசத் தூதன் போன்ற தமிழ் செய்தித்தாட்களையும் ‘இந்தியன் டெய்லி மெயில்’ எனும் ஆங்கில பத்திரிகையையும் அவர் தோற்றுவித்தார்,” என்றும் திரு நடராசன் கூறினார்.
“1950களில் கிட்டத்தட்ட 28 தமிழ்ச் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழர் பிரதிநிதித்துவ சபை என்று நிறுவினார். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தையும் நிறுவி அவற்றின் மூலம் இந்திய சமூகத்தின் நலனுக்காகப் பங்காற்றினார்,” என்றும் அவர் சொன்னார்.
“அஞ்சாத சிங்கம் போன்ற அவரது குணமும் அவரது கம்பீர தோற்றமும் இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது,” என்று தமிழவேளைப் பற்றிய நினைவுகளைக் கண்ணீர் மல்கப் பகிர்ந்தார் திரு நடராசன்.
“தமிழ் கல்விக்கும் தமிழ் படைப்பிலக்கியத்துக்கும் பாடுபட்ட தலைவர் தமிழவேள்,” என்று புகழாரம் சூட்டினார் பிரபல உள்ளூர் கவிஞர் க.து.மு. இக்பால், 81. தமது பதின்ம வயதில் தமிழ் முரசு மூலம் அவர் கற்ற வெண்பா இலக்கணமே இன்றுவரை அவர் எழுதும் கவிதை
களுக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் கூறினார்.
“நான் தமிழவேள் தோற்றுவித்த மாணவர் மணி மன்றத்தில்
எழுதித்தான் எனது எழுத்துப் பணியைத் தொடங்கினேன். சிங்கப்பூரின் பல உள்ளூர் எழுத்தாளர்களின் ஆரம்பம் அதிலிருந்துதான் தொடங்கியது,” என்றார் திரு
இக்பால்.