நீ ஆன் பலதுறைத் தொழிற்
கல்லூரி அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றின்கீழ் மாணவர்கள் தங்களுடைய பிரதான பாடங்களைத் தவிர்த்து மேலும் ஒரு பாடத்தைப் பயில வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தனிப்பட்ட கற்றல் பாதை திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 1,000 இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவர்கள் ஈடுபட்டு பலனடைவர் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி கூறியது.
நிபுணத்துவத் திறன்கள், தொழில்முனைப்பு, உலகளாவிய தயார்நிலை, சமூகத் தலைமைத்துவம் ஆகிய கற்றல் பாதைகளில் ஒன்றை மாணவர்கள் தெரிவு செய்யலாம்.
அதன்மூலம் தரவுப் பகுப்பாய்வு, வெளிநாட்டு மொழிகள் உட்பட 10 பாடங்களில் ஒன்றைப் பயிலலாம்.
ஒவ்வொரு பாடத்தையும் நிறைவு செய்ய மூன்று கற்றல் பிரிவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கற்றல் பிரிவு வகுப்பும் ஒவ்வொரு தவணை
யிலும் 45லிருந்து 60 மணி நேரத்துக்கு நடத்தப்படும். மூன்று ஆண்டு பட்டயக் கல்வியை முடித்து பட்டயச் சான்றிதழைப் பெறும்போது மாணவர்களுக்கு அவர்கள் கற்ற மேலும் ஒரு பாடத்துக்கான சான்றிதழும் வழங்கப்படும். 2023 கல்வி ஆண்டில் இந்த அறிமுகத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நடைமுறையின்படி குறைந்தது ஒரு கற்றல் பிரிவைப் பூர்த்தி செய்தால் மட்டுமே பட்டயச் சான்றிதழ் பெற முடியும்.
நேற்று நடைபெற்ற நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்ட
மளிப்பு விழாவில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், புதிய திட்டம் மாணவர்களின் மீள்திறனை மேம்படுத்தும் என்றும் புதிய வாய்ப்புகளைப் பயன்
படுத்திக்கொள்ளும் ஆற்றலை அவர்கள் பெறுவர் என்றும் கூறினார். பட்டயச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை கொவிட்-19 நெருக்கடிநிலை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து அவர் கூறினார். இருப்பினும், உலகளாவியப் பொருளியல் மீண்டுவரும் என்றும் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
"மாற்றங்களை எதிர்கொள்ளவும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி அளித்த பயிற்சி உதவும் என நான் நம்புகிறேன்," என்றார் திரு வோங்.
எதிர்காலத்தில் வேலையிடங்கள் தற்போதைய நிலையைவிட மேலும் சவால்மிக்கதாக இருக்கும் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி தலைமையாசிரியர்
கிளேரன்ஸ் டி தெரிவித்தார்.
"புதிய திட்டம் மாணவர்களுக்குக் கூடுதல் வேலை, கல்வி வாய்ப்புகளை அளிக்கும். அதுமட்டுல்லாது, மாணவர்களின் தனிப்பட்ட, வாழ்க்கைத் தொழில் மீள்திறனை அது பலப்படுத்தும் என்று அவர் கூறினார்.