சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சூழலில், புதிய பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இவற்றில் தெம்பனிஸ் நார்த்தில் ஒரு புதிய பள்ளிவாசலைக் கட்டும் திட்டமும் உள்ளடங்கும்.
பதிலாக இப்போது உள்ள பள்ளிவாசல்களை மேம்படுத்தும் பணிகளுக்கு முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் முக்கியத்துவம் கொடுக்கும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
சமூகத்திற்குச் சொந்தமான நிதி மிகவும் விவேகமான முறையில் செலவிடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தனது பள்ளிவாசல் மேம்பாட்டுச் செயல்திட்டத்தை முயிஸ் மறுபரிசீலனை செய்தது. அதைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
முயிஸ் வருடாந்திர பணித் திட்ட ஆய்வரங்கு இந்த ஆண்டில் மெய்நிகர் ரீதியாக நடந்தது. அதில் நேற்று அமைச்சர் பேசினார்.
முஸ்லிம் ஊழியர்கள் நன்கொடையாக வழங்கும் பள்ளிவாசல் கட்டுமானம் மற்றும் மெண்டாக்கி சமூக நிதியில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் $60 மில்லியன் எடுக்கப்பட்டு அந்தத் தொகையைக் கொண்டு இரண்டு புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு உள்ளன. 11 பள்ளிவாசல்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
ஆனால் இப்போது கொவிட்-19 தொற்று காரணமாக பல ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அமைச்சர் சுட்டினார். இப்போதைய நெருக்கடியில் இருந்து மீட்சி அடைய காலம் பிடிக்கும் என்றும் வரும் ஆண்டுகள் சமூகத்திற்குச் சவால்மிக்கவையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக திரு ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
பொருளியல் மீட்சி அடையும் போது புதிய பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவ்வேளையில், பென்கூலன், மலபார், காலித் ஆகிய பள்ளிவாசல்களை மேம்படுத்த இப்போது நடந்து வரும் பணிகள் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முயிஸ் அமைப்பு வரும் ஐந்து ஆண்டுகளில் இதர நான்கு பள்ளிவாசல்களை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனைத்துலக மாநாடு ஒன்றை நடத்தவும் முயிஸ் அமைப்பு திட்டமிடுகிறது.