சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க சமய அமைப்புகள் அவற்றின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோரின் அளவைக் குறைத்துள்ளன.
கொவிட்-19 தொடர்பிலான கடுமையான கட்டுப்பாடுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கோங் மெங் சான் போர் கார்க் சீ மடம், தன்னுடைய வழிபாட்டாளர்கள் ஏற்கெனவே செய்திருந்த ஒரு மணி நேர வருகை முன்பதிவுகளை ஒத்திவைத்துவிட்டது அல்லது ரத்து செய்துவிட்டது.
பிரைட் ஹில் ரோட்டில் உள்ள அந்த மடத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே வரலாம் என்று மே 30 வரை நடப்பில் இருக்கும் புதிய நிபந்தனைகள் வரம்பு விதிக்கின்றன. வருகையாளர்களும் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக இருக்கக்கூடாது. இணையத்தளம், சமூக ஊடகத் தளங்கள், மின்னணு வழியிலான செய்தி கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள், பொதுமக்களுடன் தொடர்புகொண்டு புதிய நிபந்தனைகள் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தி வருவதாக இந்த மடத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய புத்த கோயிலாக இருக்கும் இந்த மடம், ஏற்கெனவே ஊழியர்களைப் பணியில் அமர்த்தி முன்பதிவு செய்தவர்களை மட்டுமே ஞாயிற்றுக் கிழமை அனுமதித்தது.
இதனிடையே, காலமாகிவிட்ட தமது தாயாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சகோதரருடன் அந்த மடத்திற்கு வந்த சூசான் டான், 49, இரண்டு வாரங்களுக்கு முன்பே தான் முன்பதிவு செய்திருந்ததாகத் தெரிவித்தார்.
"கூட்டம் இருக்காது என்பதால் காலை 9 மணியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஏற்கெனவே பாதுகாப்பு இடைவெளி போன்ற நிபந்தனைகளை நாங்கள் கடைப் பிடித்து வருகிறோம். ஆகையால் புதிய கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து நாங்கள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை," என்று அந்த மாது தெரிவித்தார்.
சமய அமைப்புகள் சென்ற ஆண்டு டிசம்பர் முதல் அதிக பட்சமாக 250 பேரை தங்களுடைய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் அனு மதித்து வந்தன. ஆனால் இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததை அடுத்து இந்த அதிகபட்ச அளவு குறைக்கப்பட்டுவிட்டது.